மும்பை: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வென்ற போதும், இந்திய வீரர்கள் சோகத்தில் இருந்திருக்கின்றனர். இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் தந்தை மறைவு செய்து வந்திருக்கிறது. இதனால் ரிங்கு சிங்கிற்கு சக வீரர்கள் ஆறுதல் கூறி இறுதி சடங்கிற்காக அனுப்பி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் சொந்த ஊர் சென்றிருந்தார். தந்தையின் உடல்நிலை மோசமாக இருந்ததால், ரிங்கு சிங் திடீரென நொய்டா சென்றிருந்தார். இருந்தாலும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாகவே இந்திய அணியுடன் இணைந்தார்.

இதையடுத்து ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இருந்தாலும் ஃபீல்டிங்கில் ரிங்கு சிங் தனது பங்கை கொடுத்தார். இந்தப் போட்டிக்கு பின் ரிங்கு சிங்கிற்கு ஒரு அதிர்ச்சியாக தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. இன்று காலை ரிங்கு சிங்கின் தந்தை கன்சந்த் சிங் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய வீரர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த சில மாதங்களாகவே ரிங்கு சிங்கின் தந்தை கன்சந்த் சிங் உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்து வந்தார். அவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால், தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அலிகார் பகுதியில் இருந்து உயர் சிகிச்சைக்காக நொய்டாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். ஆனால் கடந்த சில நாட்களாக கன்சந்த் சிங்கின் உடல்நிலை மோசமாகி இருக்கிறது.
இதன் காரணமாகவே டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்த ரிங்கு சிங், திடீரென ஒரேயொரு நாள் மட்டும் விடுப்பு பெற்று தந்தையை பார்க்க சென்றார். இதன்பின் மீண்டும் இந்திய அணியுடன் இணைந்த சூழலில், இப்படியொரு அதிர்ச்சியான செய்தி அவருக்கு தெரிய வந்துள்ளது. இதன்பின் தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க ரிங்கு சிங் புறப்பட்டுள்ளார்.
அண்மையில் ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் எம்பி பிரியா சரோஜ் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கூட ரிங்கு சிங் தந்தை கன்சந்த் சிங் கொஞ்சம் விலகியே இருந்தார். இந்த சம்பவம் தெரிய வந்த பின் ரசிகர்கள் பலரும் ரிங்கு சிங்கிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.