மும்பை: டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவை பயிற்சியாளர் கம்பீர் பாராட்டியுள்ளார். களத்தில் அவரது தனித்த திறமையை விட, கேப்டன்ஷிப் மற்றும் வீரர்களுடனான தொடர்பே தனக்கு பல விஷயங்களை எளிதாக்கியதாக கம்பீர் கூறினார்.
இது தொடர்பாக ஜியோஸ்டாரில் பேசிய கம்பீர், "இந்த வடிவில் என்னுடைய வாழ்க்கையை அவர் மிகவும் எளிதாக்கிவிட்டார். அவர் ஒரு அற்புதமான தலைவன் என்று நான் நினைக்கிறேன். களத்தில் அவர் என்ன செய்கிறார் என்பதிலோ அல்லது அவர் ஒரு பேட்ஸ்மேனாக தனது ஷாட்களை வெளிப்படுத்துவதிலோ அவரைப் பற்றி நான் கூறவில்லை. அதையெல்லாம் ஒதுக்கி வைக்கலாம்."

"ஆனால், அவர் வீரர்களுடன் பழகும் விதம், பேசும் விதம், அவர்களுடன் நேரத்தைச் செலவிடும் விதம், களத்தில் எவ்வளவு நிதானமாக இருக்கிறார் என்பதுதான் முக்கியம். ஒரு பயிற்சியாளராக, அவர் சூழ்நிலையை அமைதியாக வைத்திருப்பார் என்பதால் நீங்கள் மற்ற விஷயங்களைப் பற்றி சிந்திக்கலாம். இது எந்தப் பயிற்சியாளருக்கும் ஒரு கனவாகும்.”
"என்னை பொறுத்தவரை, சூர்யா ஒரு வீரராக இருப்பதை கடந்து, தலைவனாக ஒவ்வொரு தகுதியையும் டிக் செய்துள்ளார். அது என் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கிவிட்டது. அவரைப் போன்ற ஒருவர் தலைமையாக இருப்பது ஒரு சிறந்த விஷயம், ஏனெனில் அவரது நல்லெண்ணம் சரியான இடத்தில் உள்ளது. குறிப்பாக அழுத்தமான சூழ்நிலைகளில் அவர் சரியான முடிவுகளை எடுக்கிறார்," என கம்பீர் கூறினார்.
டி20 உலகக் கோப்பை 2026 தொடரை இந்திய அணி அமெரிக்காவுக்கு எதிராக 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடங்கியது. இதனையடுத்து வரும் பிப்ரவரி 12, வியாழக்கிழமை அன்று டெல்லியில் நமீபியாவை அடுத்ததாக எதிர்கொள்கிறது. அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் முன்னின்று செயல்பட்டார். முதலில் பேட் செய்த இந்தியா, 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியபோது, கேப்டன் சூர்யகுமார் 49 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 171.43 ஸ்ட்ரைக் ரேட்டில், ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் குவித்து அணியை மீட்டெடுத்தார்.
இதனால் இந்திய அணி கடும் நெருக்கடியிலிருந்து மீண்டது. தொடரின் தொடக்கத்திலேயே கேப்டன் சிறப்பான ஃபார்மில் இருப்பது இந்தியாவிற்கு ஒரு நேர்மறையான அறிகுறியாகும். குரூப் ஸ்டேஜ் முழுவதும் தனது வெற்றிப் பயணத்தைத் தொடர இந்திய அணி இலக்கு நிர்ணயித்துள்ளது. கம்பீருக்கும் பயிற்சியாளராக இது ஒஐ மிகப்பெரிய அக்னி பரீட்சையாக மாறி உள்ளது.