அகமதாபாத்: 2026 டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் அணியின் துணை கேப்டன் அக்சர் படேலை ஆடும் லெவனில் இருந்து நீக்கியது குறித்து மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தென்னாப்பிரிக்க பேட்டிங் வரிசையில் உள்ள இடது கை ஆட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற உத்தியின் அடிப்படையில் அக்சர் படேலுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், அந்தத் திட்டம் களத்தில் எடுபடவில்லை. வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் 2 ஓவர்கள் வீசி 17 ரன்களை விட்டுக் கொடுத்தார். பேட்டிங்கிலும் ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே ஆகியோருக்கு முன்பாக 5-வது வரிசையில் களமிறக்கப்பட்டு வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார்.

இந்தத் தோல்விக்குப் பிறகு தனது ஆஷ் கி பாத் யூடியூப் தளத்தில் பேசிய அஸ்வின், சர்வதேசப் போட்டிகளில் அடிக்கடி அணியை மாற்றுவது நல்லதல்ல என்று சுட்டிக்காட்டினார். "ஐபிஎல் தொடரில் 14 போட்டிகள் இருப்பதால் ஒவ்வொரு போட்டிக்கும் ஏற்ப எதிரணிகளைக் கணித்து ஆடும் லெவனை மாற்றுவது சரிதான். ஆனால், ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் அணியை எந்த அளவுக்கு நிலையாக வைத்திருக்கிறோமோ அதுதான் சிறந்தது."
"இடது கை பேட்டர்களுக்கு எதிராக வாஷிங்டன் சுந்தரைப் பயன்படுத்த வேண்டும் என்ற வாதத்தை நான் நூறு சதவீதம் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் மிக முக்கிய வீரராக அக்சர் படேல் இருந்து வருகிறார். இதுவரை அணிக்கு அவர் அளித்துள்ள பங்களிப்பை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிடக் கூடாது" என்று அஸ்வின் தெரிவித்தார்.
2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அக்சர் படேலின் ஆட்டத்தை நினைவுகூர்ந்த அஸ்வின், அவரது பேட்டிங் திறமையையும் புகழ்ந்து பேசினார். "கடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இதே தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இக்கட்டான சூழலில் அக்சர் படேல் களமிறங்கினார். அவர் விராட் கோலியுடன் இணைந்து சிறப்பான கூட்டணியை அமைத்ததால் தான் இந்திய அணி 170 ரன்களைக் கடக்க முடிந்தது."
"விராட் கோலியின் அனுபவம் கை கொடுத்தது உண்மைதான், ஆனால் அக்சர் படேலும் பேட்டிங்கில் யாருக்கும் சளைத்தவர் அல்ல. நேற்றைய போட்டியில் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை இழக்காமல் அணிக்கு ஒரு நிலைத்தன்மை கிடைத்திருந்தால் இந்தியா வெற்றி இலக்கை எளிதாக எட்டியிருக்கும்" என்று அஸ்வின் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட துணை கேப்டன் அக்சர் படேல், அகமதாபாத்தில் நடந்த முக்கியத்துவம் வாய்ந்த தென்னாப்பிரிக்கப் போட்டியிலும் புறக்கணிக்கப்பட்டது முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தத் தோல்வியால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு சற்றே சிக்கலாகியுள்ளது. இந்திய அணி தனது அடுத்த சூப்பர் 8 போட்டியில் ஜிம்பாப்வே அணியை வரும் வியாழக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்தப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி உள்ளது.