அகமதாபாத்: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தனிப்பட்ட சாதனைகளை விட அணி கோப்பைகளுக்கே ரசிகர்கள் முக்கியத்துவத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி, இந்தியா ஒரு வரலாற்று வெற்றியுடன் தொடர்ந்து இரண்டாவது டி20 உலகக் கோப்பையை வென்றது.
வெற்றிக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய கம்பீர், "சூர்யாவிடம் எனது எளிமையான கொள்கை குறித்து பேசுவேன். எப்போதும் தனிப்பட்ட சாதனைகள் விட, கோப்பைகளே முக்கியம். இந்திய கிரிக்கெட்டில் நீண்ட காலமாக சாதனைகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். நான் இங்கே இருக்கும் வரை, சாதனைகளைப் பற்றி நாம் பேச மாட்டோம் என நம்புகிறேன்," என்று கம்பீர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

"சாதனைகளைக் கொண்டாடுவதை நிறுத்தி, கோப்பைகளைக் கொண்டாடுங்கள் என்பதே முக்கியம். ஒரு அணி விளையாட்டின் பெரிய நோக்கம் தனிப்பட்ட ரன்களைப் பெறுவது அல்ல, கோப்பைகளை வெல்வதே ஆகும். இது எனக்கு ஒருபோதும் முக்கியமில்லை, ஒருபோதும் முக்கியமாக இருக்காது," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

"இம்மைதானத்தில் சூர்யா எனது பணியை மிகவும் எளிதாக்கிவிட்டார். அவர் ஒரு அற்புதமான தலைவர். அவர் தன்னை கேப்டன் என்று அழைக்க விரும்பவில்லை, லீடர் என்று நிரூபிக்க விரும்புகிறார். ஒரு டிரஸிங் ரூம்மில் கேப்டனை விட ஒரு தலைவர் பெரியவர். கடந்த மூன்று போட்டிகளில் சஞ்சு என்ன செய்தார் என்பதை நீங்கள் எளிதாகக் காணலாம். அவர் தனிப்பட்ட மைல்கல்களை நோக்கி விளையாடியிருந்தால் (, நாம் 50 ரன்களைக்கூட எட்டியிருக்க மாட்டோம்," என்று கம்பீர் கூறினார். சூர்யகுமாருடன் ஒரே எண்ணத்தில் இருந்தது தனது அதிர்ஷ்டம் எனவும் அவர் வெளிப்படுத்தினார்.
அகமதாபாத்தில் உள்ள புகழ்பெற்ற நரேந்திர மோடி மைதானத்தில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா தொடர்ந்து இரண்டாவது டி20 உலகக் கோப்பையை வென்றது. இந்தியா முதலில் பேட் செய்து ஐந்து விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவிக்க, நியூசிலாந்து அணி 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த இறுதிப் போட்டி 82.1 கோடி பார்வையாளர்களைப் பெற்ற சாதனையையும் படைத்தது.
டி20 உலகக் கோப்பையை வென்ற வீரராகவும், தலைமைப் பயிற்சியாளராகவும் வென்ற ஒரே கிரிக்கெட் வீரர் என்ற அரிய சாதனையை 44 வயதான கௌதம் கம்பீர் படைத்தார். இந்த உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்ற மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் சஞ்சு சாம்சன் பெற்றார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை தனது முன்னாள் சீனியர்களான இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பிசிசிஐ தேசிய கிரிக்கெட் அகாதமி தலைவர் வி.வி.எஸ். லக்ஷ்மண் ஆகியோருக்கு கம்பீர் அர்ப்பணித்தார். இந்திய அணியை ஒரு நல்ல நிலையில் கொண்டு வந்து நிறுத்திய ராகுல் டிராவிட்டிற்கும், தேசிய கிரிக்கெட் அகாடமியில் திறமையான வீரர்களை உருவாக்கித் தந்த லக்ஷ்மணுக்கும் இந்தக் கோப்பை உரித்தானது என கம்பீர் குறிப்பிட்டார்.

"ஒரு பயிற்சியாளர் அவரது அணியைப் பொறுத்தே சிறப்படைகிறார். இந்த அணியில் உள்ள வீரர்களே என்னை இந்த பயிற்சியாளராக மாற்றினார்கள்," என்று அவர் கூறினார். தோல்வி பயத்தை கைவிட்டு, ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் 250 ரன்களைக் குவித்தது அணியின் தைரியத்தை வெளிப்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.