லாகூர்: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி உலகக்கோப்பையை வென்றுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் வெற்றியை குறைத்து மதிப்பிடும் விமர்சகர்களுக்கு பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் இமாத் வாசிம் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய அணிக்கு சாதகமாக ஆடுகளங்கள் அமைக்கப்பட்டதாகவும், நடுவர்கள் இந்தியாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் சில விமர்சகர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த கருத்துகளை பாகிஸ்தான் வீரர் இமாத் வாசிம் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்த உலகக் கோப்பையில் ஆடுகளங்கள் இரு அணிகளுக்கும் சமமாகவே அமைக்கப்பட்டிருந்தன என்று கூறினார்.

சில நேரங்களில் ஆடுகளத்தின் தன்மை இந்திய அணிக்கு பாதகமாக அமைந்தாலும், அவர்கள் எந்தவித புகாரும் இன்றி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய இமாத் வாசிம், இந்திய அணியின் வெற்றியை பார்த்து குறை கூறுவதை மற்ற அணிகள் முதலில் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. எனவே ஒரு கிரிக்கெட் விளையாடும் நாடாக நாம் அவர்களின் செயல்பாட்டை மனதார பாராட்ட வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை பாகிஸ்தான் மற்றும் மற்ற பல அணிகளை விட இந்திய அணி மிகப் பெரிய அணியாக உருவெடுத்துள்ளது என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளது. 2026 டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தங்களது கோப்பையை தக்கவைத்த முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. மேலும், போட்டியை நடத்தும் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்ற முதல் அணி மற்றும் ஒட்டுமொத்தமாக மூன்று முறை டி20 உலகக்கோப்பை வென்ற முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனையையும் இந்திய அணி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.