மும்பை: 2026 டி20 உலககோப்பை சூப்பர் 8 குரூப் 1 போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஜிம்பாப்வேயை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் குவித்து, டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தது. பதிலுக்கு ஆடிய ஜிம்பாப்வே அணி 17.4 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்கில், ஷிம்ரன் ஹெட்மயர் 34 பந்துகளில் 7 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் அதிரடியாக 85 ரன்கள் எடுத்தார். ரோவ்மன் பவல் 35 பந்துகளில் 59 ரன்கள் சேர்க்க, ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு 13 பந்துகளில் 31* ரன்களும், ரொமாரியோ ஷெப்பர்ட் 10 பந்துகளில் 21 ரன்களும் குவித்து பங்களித்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சில், குடகேஷ் மோட்டி 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், அகேல் ஹோசைன் 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஜிம்பாப்வே அணியில் பிராட் எவான்ஸ் மட்டுமே 21 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஓரளவு சவால் அளித்தார்.
இந்த வெற்றியின் வாயிலாக, 2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை மேற்கிந்தியத் தீவுகள் வலுப்படுத்தியுள்ளது. குரூப் 1 புள்ளிகள் பட்டியலில் 2 புள்ளிகள் மற்றும் +5.350 நிகர ரன்ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவை வீழ்த்திய பிறகு, தென்னாப்பிரிக்கா 2 புள்ளிகள், +3.800 நிகர ரன்ரேட்டுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
மறுபுறம், கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமதாபத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதால், இந்திய அணியின் 2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதித் தகுதி வாய்ப்பு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. முக்கியமான இரண்டு புள்ளிகளை இழந்ததோடு, அணியின் நிகர ரன்ரேட்டும் -3.800 ஆக சரிந்தது.
ரன்ரேட் சிக்கல் இல்லாமல் அரையிறுதிக்கு முன்னேற, இந்திய அணி சென்னை மற்றும் கொல்கத்தாவில் முறையே ஜிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுடனான இரு சூப்பர் 8 போட்டிகளிலும் வெல்ல வேண்டும். மேலும், தென்னாப்பிரிக்கா தங்கள் மீதமுள்ள இரு சூப்பர் 8 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். இச்சூழ்நிலையில், தென்னாப்பிரிக்கா (6 புள்ளிகள்) மற்றும் இந்தியா (4 புள்ளிகள்) தகுதிபெறும்.
இருப்பினும், இந்திய அணி தங்கள் எஞ்சிய இரு சூப்பர் 8 சுற்றுப் போட்டிகளிலும் பெரிய ரன் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். ஏனெனில், 4 புள்ளிகளுடன் மூன்று அணிகள் சமநிலையில் முடிவடைந்து, ரன்ரேட் கணக்கிற்கு வரும் வாய்ப்புள்ளது. இந்தியா தங்கள் இரண்டு ஆட்டங்களிலும் வென்று, தென்னாப்பிரிக்கா ஜிம்பாப்வேயை வென்று மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்றால், இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்றும் தலா நான்கு புள்ளிகளில் இருக்கும்.

இரண்டு புள்ளிகளுடன் இந்தியா தகுதிபெற சிறிய வாய்ப்பே உள்ளது. இந்தச் சூழலில், தென்னாப்பிரிக்கா அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும். இந்தியாவின் ஒரு வெற்றி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அமைய வேண்டும். அப்போது இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே ஆகிய மூன்று அணிகளும் தலா இரண்டு புள்ளிகளில் இருக்கும். ஆனால், ஒரு பெரிய ரன்ரேட் கிடைத்தால் மட்டுமே இந்தியா இரண்டாவது இடத்துக்கு வந்து தகுதிபெற முடியும்.