மும்பை: டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கம்பீர் இடம்பெறாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
டி20 உலக கோப்பை இந்திய அணியில் இருந்து சுப்மன் கில் நீக்கப்பட்டது கம்பீருக்கு பிடிக்கவில்லை என்பதால், இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. டி20க்கான இந்திய அணியில் சுப்மன் கில் சேர்க்கப்பட வேண்டும் என கம்பீர்தான் முடிவெடுத்தார்.

ஆனால் கில், இந்திய டி20 அணிக்கு வந்த பின்பு அணியின் பேட்டிங்கை பாதித்தது. நன்றாக விளையாடி வந்த சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காமல் போனது. இது பல்வேறு விவாதங்களையும் குழப்பத்தையும் ஏற்படுத்தின. இதனால் ரசிகர்கள் பலரும் கில்லை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
கம்பீரின் இந்த முடிவால் கேப்டன் சூர்யகுமார் யாதவும் அதிருப்தியில் இருந்தார் என கூறப்படுகிறது. இதனை வெளிப்படையாக பல்வேறு செய்தியாளர்கள் சந்திப்பில் தாமும் கில்லும் பேட்டிங்கில் சரியாக விளையாட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த சூழலில் சஞ்சு சாம்சன் தமக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல், இந்திய அணி பழைய மாதிரி பேட்டிங்கில் சாதித்தது.
இதனால் கில் அணியை விட்டு நீக்கப்பட வேண்டும் என அஜித் அகர்கரும், சூரியகுமார் யாதவும் முடிவெடுத்து விட்டனர். ஆனால் இதற்கு கம்பீர் ஒப்புக்கொள்ளவில்லை. கில்லை கண்டிப்பாக சேர்த்தே ஆகவேண்டும் என்றும் அவர்தான் இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும் கம்பீரின் இந்த பேச்சை சூரிய குமாரும் அஜித் அகர்ரும் கேட்கவில்லை. கேப்டன் என்பதால் தாம் சொல்லும் அணியை தேர்வு செய்ய வேண்டும் என்று சூரியகுமார் யாதவும் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால் கடுப்பான கம்பீர் தேர்வு குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று முடிவெடுத்து புறக்கணித்து இருக்கிறார்.ஆனால் இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், அணியில் எந்த மோதலும் இல்லை என்றும் கம்பீர் தொடர்ந்து கிரிக்கெட் பணியில் இருந்ததால் அவரால் தேர்வு குழுவின் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.