மும்பை: பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், இந்திய அணி குறித்து மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார். நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறாது என்று அவர் கணித்துள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, லீக் சுற்றில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது. கடந்த மூன்று ஐசிசி தொடர்களாக இந்திய அணி தோல்வியே அடையாமல் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், இந்திய அணியின் பேட்டிங் வரிசை இன்னும் முழுமையான நிலைக்கு வரவில்லை என்ற விமர்சனம் எழுந்து வருகிறது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற முகமது அமீரிடம், சூப்பர் 8 சுற்றில் 'ஏ' பிரிவில் இருந்து எந்த இரண்டு அணிகள் அரையிறுதிக்குச் செல்லும் என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்" என்று கூறினார். இந்திய அணி கடைசி நான்கு இடங்களுக்குள் வராது என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு வாய்ப்பில்லை என்று கூறியதற்கு அமீர் சில முக்கியக் காரணங்களையும் முன்வைத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியைத் தவிர, மற்ற அனைத்து லீக் போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்டிங் வரிசை பெரும் சரிவைச் சந்தித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சூப்பர் 8 சுற்றில் போட்டிகள் மிகவும் சவாலானதாக இருக்கும் என்பதால், அங்கு நிலவும் அழுத்தத்தை இந்திய வீரர்கள் சமாளிப்பது கடினம் என அவர் கூறினார். தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தற்போது விளையாடி வரும் விதத்தைப் பார்த்தால், அவர்களால் எந்த ஒரு வலுவான அணியையும் வீழ்த்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக, இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா இந்தத் தொடரில் இதுவரை மூன்று போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாக அமீர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்திய அணி தனது சூப்பர் 8 பயணத்தை பிப்ரவரி 22-ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அகமதாபாத்தில் தொடங்குகிறது. அதன் பிறகு பிப்ரவரி 26-ம் தேதி சென்னையில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. கடைசியாக மார்ச் 1-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதவுள்ளது.
மற்றொரு பிரிவான 'பி' பிரிவில் பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் உள்ளன. இந்தப் பிரிவில் இருந்து பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று அமீர் தெரிவித்துள்ளார்.
முகமது அமீரின் இந்த அதிரடியான கணிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அணி அரையிறுதி செல்லாது எனவும், இந்தியா தான் அரையிறுதி செல்லும் எனவும் இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.