லாகூர்: 2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி குறித்து தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்துவரும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார். இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுவது பற்றி சீண்டும் வகையில் பேசி இருக்கிறார்.
பாகிஸ்தானின் 'ஹார்னா மனா ஹை' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய முகமது அமீரிடம், அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுகிறதோ இல்லையோ, ஆனால் இந்திய அணி நிச்சயமாக அரையிறுதிக்குச் செல்லாது" என்று அடித்துச் சொல்லியுள்ளார். அமீரின் இந்தத் திடீர் பதிலைக் கேட்டு நிகழ்ச்சியின் தொகுப்பாளரே அதிர்ச்சியடைந்தார்.

ஏற்கனவே இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா குறித்து அமீர் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தார். அபிஷேக் சர்மா ஒரு முழுமையான பேட்ஸ்மேன் இல்லை என்றும், அவர் கண்ணை மூடிக்கொண்டு பந்தைச் சுற்றும் ஒரு வீரர் மட்டுமே என்றும் கூறியிருந்தார். அவரிடம் தற்காப்பு ஆட்டம் இல்லை என்றும் விமர்சித்திருந்தார். அமீரின் இந்தக் கருத்துக்கு இந்திய முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
சூப்பர் 8 சுற்று தொடங்குவதற்கு முன்பே, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இந்தியாவை விடச் சிறப்பாக விளையாடுவதால், இந்தியா அரையிறுதிக்குச் செல்லாது என்று அமீர் கணித்திருந்தார். அதற்கேற்றார்போல் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தபோது, அமீரின் கணிப்பு உண்மையாகிவிடுமோ என்று பாகிஸ்தான் ஊடகங்கள் விவாதித்தன. அவரை ஒரு 'ஜோதிடர்' என்றும் சிலர் வர்ணித்தனர்.
ஆனால், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்திய அணி தனது பலத்தை நிரூபித்துள்ளது. இருப்பினும், அமீர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.
இந்திய அணி அரையிறுதிக்குச் செல்ல வேண்டுமானால், ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வாழ்வா சாவா ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். ஜிம்பாப்வேயை வீழ்த்திய உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது.

மறுபுறம், நியூசிலாந்து அணியை இங்கிலாந்து வீழ்த்தியதால் பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு அதிர்ஷ்டவசமாக இன்னும் உள்ளது. இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி சுமார் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அல்லது 14 ஓவர்களுக்குள் இலக்கை எட்டினால், ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகள் மட்டுமே இதுவரை அரையிறுதியை உறுதி செய்துள்ளன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளிடையே போட்டி நிலவுகிறது. இந்தச் சூழலில் அமீரின் இந்தக் கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா அமீரின் வாயை அடைக்க வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.