சென்னை: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் துணை கேப்டன் சுப்மன் கில் நீக்கப்பட்டிருப்பது தான் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஆச்சரியமான நிகழ்வு என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். அகர்கரின் இந்த முடிவு மிகவும் பிரமாதமானது என்று அவர் பாராட்டியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை அன்று இந்திய அணி t20 உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது. இதில் துணை கேப்டனாக செயல்பட்டு வந்த கில், அதிரடியாக நீக்கப்பட்டு இசான் கிஷன் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இதன் மூலம் தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெறுவது உறுதியாகிவிட்டது. கில் நடப்பாண்டில் வெறும் 15 போட்டிகளில் விளையாடி 291 ரன்கள் தான் அடித்திருந்தார். அவருடைய ஸ்ட்ரைக் ரெட்டும் 140க்கு கீழ் இருந்தது. பெரிய ஸ்கோர் எடுக்காததால் அது இந்தியாவின் பேட்டிங்கை பாதித்தது.
இந்த நிலையில் தேர்வு முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீகாந்த், இந்த முடிவை பார்த்து நான் உண்மையிலே அதிர்ச்சி அடைந்தேன். இது மிகவும் நல்ல முடிவு. கில் போன்ற ஒரு வீரரை அவர்கள் நீக்குவார்கள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் இந்திய அணியின் துணை கேப்டனாக அவர் இருந்தார்.
ஆஸ்திரேலிய தொடரிலும் அவர்தான் துணை கேப்டனாக இருந்தார். தற்போது ரிங்கு சிங், இசான் கிசன் அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். குறிப்பாக இஷான் கிசன் கடந்த சில ஆண்டுகளாக அணியிலே இல்லை. சையது முஸ்தாக் அலி தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது உண்மையிலேயே சிறந்த முடிவு.
இதற்காகவே நான் அஜித் அகர்கரையும் மற்ற தேர்வு குழு உறுப்பினர்களையும் பாராட்டுகின்றேன். ஒரு நாள் கிரிக்கெட்டில் கில் மிகவும் பிரமாதமான வீரராக இருந்தார். இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் மிகப்பெரிய அளவு அவர் ரன்களை சேர்த்தார். எனினும் டி20 கிரிக்கெட்டில் தடுமாறி வந்தார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட்டும் ரன் குவிக்கும் திறனும் இசான் கிஷன் அளவு இல்லை. இதனால் தான் அபிஷேக் ஷர்மாவும், சஞ்சு சான்சனும் தொடக்க வீரர்களாக இருந்தார்கள்.
தற்போது அபிஷேக் ஷர்மா உலகின் நம்பர் ஒன் டி20 வீரராக இருக்கின்றார். சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோர் விக்கெட் கீப்பர் தொடக்க பேட்ஸ்மேன்களாக தற்போது அணியில் இருக்கிறார்கள். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இசான் கிஷன் அணிக்கு திரும்பி இருக்கிறார். நான் இஷான் கிசனுக்காக உண்மையிலே சந்தோஷப்படுகிறேன். யாரும் மறந்துவிட வேண்டாம். ஒரு நாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்து பின் 50 ஓவர் உலகக் கோப்பை அணியில் இருந்தார். திடீரென்று அவர் அணியில் நீக்கப்பட்டார் என்று குறிப்பிட்ட ஸ்ரீகாந்த் ஒட்டு மொத்தமாக அணியை பாராட்டியுள்ளார்.