சென்னை: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் அணியை கலாய்த்து இருக்கிறார் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பது குறித்து பாகிஸ்தான் சந்தேகம் கிளப்பி இருந்தது. வங்கதேசத்திற்கு ஆதரவாக உலகக்கோப்பையைப் புறக்கணிக்கப் போவதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டி, ஸ்ரீகாந்த் பாகிஸ்தானை கிண்டலாக எச்சரித்துள்ளார்.
தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், "ஹலோ பாகிஸ்தான்.. நீங்க உலகக்கோப்பைக்கு வராம இருப்பதே நல்லது. உங்கள் வாரியத் தலைவர் மோஷின் நக்வி சொன்னது சரிதான். இப்போது இருக்கும் இந்திய அணியிடம் மாட்டினால், உங்களை அடித்துத் துவம்சம் செய்துவிடுவார்கள். இந்திய வீரர்கள் அடிக்கும் சிக்ஸர்கள் கொழும்புவில் இருந்து நேராக மெட்ராஸில் வந்து விழும். அதனால் ஏதாவது சாக்கு சொல்லி வராமல் இருப்பதே உங்களுக்குப் பாதுகாப்பானது" என்று கலகலப்பாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் சமீபத்திய ஆட்டங்கள் குறித்துப் பேசிய அவர், "கடந்த போட்டியில் 209 ரன்களை 15 ஓவர்களில் முடித்தார்கள். இப்போட்டியில் 150 ரன்களை வெறும் 10 ஓவர்களில் எட்டிப்பிடித்து விட்டார்கள். இதைப் பார்க்கும் மற்ற அணிகள், 'கப் உங்களுக்குத்தான்.. நாங்க வரல' என்று சொல்லும் அளவிற்கு இந்திய அணியின் ஆதிக்கம் உள்ளது. டி20 கிரிக்கெட்டில் இப்படி ஒரு அதிரடியை நான் இதுவரை பார்த்ததில்லை. இது உலகலாவிய கிரிக்கெட் அணிகளுக்கு ஒரு அபாய சங்கு" என்று கூறினார்.
இளம் வீரர் அபிஷேக் சர்மாவின் பேட்டிங் குறித்தும் ஸ்ரீகாந்த் வெகுவாகப் பாராட்டியுள்ளார். "அபிஷேக் சர்மா மிகவும் சர்வசாதாரணமாக சிக்ஸர்களை விளாசுகிறார். அவர் கஷ்டப்பட்டு அடிப்பது போலவே தெரியவில்லை. மிட்-விக்கெட், கவர்ஸ் என மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகள் பறக்கின்றன. எங்குப் பந்துவீசுவது என்று தெரியாமல் பந்துவீச்சாளர்கள் பயப்படுகிறார்கள்" என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா வர மறுத்த வங்கதேச அணி உலகக்கோப்பையில் இருந்து நீக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பாகிஸ்தான் அணியும் தொடரைப் புறக்கணிக்கலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் கூறியிருந்தார். இருப்பினும், ஐசிசி எச்சரிக்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் உலகக்கோப்பைக்கான அணியை அறிவித்துள்ளது.
உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் ஆட்டம் பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்புவில் நடைபெறவுள்ளது.