மும்பை: 2026 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்திடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நேபாள வீரர் நந்தன் யாதவ், செய்தியாளர் சந்திப்பில் தோனியின் பெயரை குறிப்பிட்டார். மும்பையின் வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடியை நேபாள் கொடுத்தது. இந்த தோல்வியிலிருந்து கற்ற பாடம் என்னவென்ற கேள்விக்கு, நேபாள் அணியின் பவுலர் நந்தன் யாதவ், "மகேந்திர சிங் தோனியைப் போல சில சிக்ஸர்களை அடிப்பதுதான் பாடம்," என பதிலளித்தார்.
போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நேபாள கேப்டன் ரோஹித் பாடெல், தோல்வி குறித்து வருத்தப்பட்டாலும், அணியின் அர்ப்பணிப்புக்கு பெருமைப்பட்டார். பங்கேற்பதற்காக வரவில்லை, சிறந்த கிரிக்கெட்டை விளையாடவே வந்தோம் என்றார்.

இது குறித்து பேசிய அவர், "வருத்தம் இருந்தாலும், அணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இங்கிலாந்துக்கு எதிராக வீரர்கள் வெளிப்படுத்திய முயற்சி பாராட்டத்தக்கது. இன்று களத்தில் இறங்கும்போது, 'எங்களிடம் இருப்பதையெல்லாம் 110% களத்தில் கொடுப்போம்' என்பதே அணிக்கு எங்கள் செய்தி. வீரர்கள் தங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தினர். இதுதான் அவர்களை தனித்துவமாக்குகிறது. நான் மிகவும் பெருமைப்படுகிறேன்."
"இந்த உலகக் கோப்பைக்கு வரும்போதே எங்களுக்கு அந்த நம்பிக்கை இருந்தது. பங்கேற்பதற்காக மட்டும் வரவில்லை, போட்டியிட விரும்பினோம். எங்களின் சிறந்த கிரிக்கெட்டை விளையாடினால் எந்த அணியையும் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்குள் இருந்தது," தெரிவித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான போட்டியில் நேபாளம் வரலாற்று வெற்றியை நெருங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 184/7 ரன்கள் குவித்து சவாலான இலக்கை நிர்ணயித்தது.பதிலுக்கு விளையாடிய நேபாளம், ஆரம்பத்திலிருந்தே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடைசி இரண்டு ஓவர்களில் 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 180/6 ரன்கள் எடுத்து இலக்கை நெருங்கியும் வெல்ல முடியவில்லை. அடுத்ததாக பிப்ரவரி 12 அன்று, மீண்டும் மும்பையில் இத்தாலி அணியுடன் மோதவுள்ளனர்.