சென்னை: டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், நியூசிலாந்து அணி கனடாவுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு நியூசிலாந்து அணி முன்னேறியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கிளென் பிலிப்ஸ் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அபாரமாக பார்ட்னர்ஷிப் அமைத்து நியூசிலாந்து இலக்கை எளிதாக எட்ட உதவினர்.
போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. யுவராஜ் சம்ரா சிறப்பான தொடக்கத்தை அளித்தார். சம்ரா, 58 பந்துகளில் ஒரு சதம் அடித்து அசத்தினார். டி20 உலகக் கோப்பையில் சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். சம்ராவும், கேப்டன் தில்ப்ரீத் பஜ்வாவும் இணைந்து 116 ரன்கள் சேர்த்தனர். நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் கடைசி மூன்று ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து கட்டுப்படுத்தியதால், 20 ஓவர் முடிவில் கனடா அணி 173 ரன்கள் குவித்தது.

174 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பம் சரியாக அமையவில்லை. பவர்ப்ளேயின் உள்ளேயே ஃபின் ஆலன் மற்றும் டிம் சீஃபர்ட் ஆகிய இரு தொடக்க வீரர்களையும் இழந்தது. டிலான் கெய்லிகர் மற்றும் சாத் பின் ஸாஃபர் ஆகியோர் கனடாவுக்கு ஆரம்ப விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் நியூசிலாந்து 30 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த இக்கட்டான நிலையில் கிளென் பிலிப்ஸ் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இணைந்து நியூசிலாந்து அணியை மீட்டனர். இருவரும் நிதானம் மற்றும் அதிரடியை கலந்து ஆடி கனடா பந்துவீச்சாளர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கினர். விக்கெட் இழப்பின்றி 146 ரன்கள் குவித்த இந்த ஜோடி, ஆட்டத்தை முழுமையாக நியூசிலாந்தின் பக்கம் திருப்பியது. முடிவில், 15.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.
ஆட்டநாயகன் விருதை வென்ற கிளென் பிலிப்ஸ் "நானும் ரச்சினும் ஒரு பந்தை மட்டும் இலக்காகக் கொண்டு விளையாடினோம். சில நாட்களில் பந்துகள் உங்களுக்குச் சாதகமாக அமையும், இன்று எனக்கும் ரச்சினுக்கும் அது போன்ற ஒரு நாளாக இருந்தது," என்று தெரிவித்தார். அவர் 36 பந்துகளில் 76* ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார்.
நியூசிலாந்து அணியின் தற்காலிக கேப்டன் டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னரின் உடல்நிலை மேம்பட்டுள்ளதாகவும், அடுத்த போட்டிக்கு அவர் தயாராகிவிடுவார் என்றும் தெரிவித்தார். யுவராஜ் சம்ராவின் பேட்டிங்கைப் பாராட்டிய மிட்செல், "அவர் அற்புதமாக விளையாடினார், அவருக்கு நாம் சல்யூட் செய்ய வேண்டும்," என்று கூறினார். கனடாவை 173 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய பந்துவீச்சாளர்களின் முயற்சியையும் அவர் பாராட்டினார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு சிறிய சறுக்கலைத் தவிர, நியூசிலாந்து அணி மூன்று சிறப்பான ரன் சேஸிங்குகளை செய்து சூப்பர் 8 சுற்றுக்கு தனது இடத்தைப் பதிவு செய்துள்ளது. பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் ரன் குவித்து, நல்ல நம்பிக்கையுடன் இருப்பதால், அடுத்த சுற்றில் நியூசிலாந்து ஒரு வலுவான சக்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனடா சிறப்பாக விளையாடியிருந்தாலும், நியூசிலாந்தின் சக்திவாய்ந்த பேட்டிங் யூனிட்டுக்கு எதிராக அவர்களுக்கு எந்த பதில் தரமுடியவில்லை. தற்போது இந்த சூற்றில் இருந்து தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.