கொழும்பு: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதை அடுத்து, பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு பெரும் சிக்கலாகியுள்ளது. கொழும்பில் புதன்கிழமை நடைபெற்ற சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் மிட்செல் சான்ட்னர் பேட்டிங்கிலும், ரச்சின் ரவீந்திரா பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு தங்கள் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தனர். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. அதே வேளையில், இந்த முடிவு சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. குரூப் 2 பிரிவில் இருந்து இங்கிலாந்து அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து - 4 புள்ளிகள் (2 போட்டிகள், நிகர ரன் ரேட் +1.491)
நியூசிலாந்து - 3 புள்ளிகள் (2 போட்டிகள்)
பாகிஸ்தான் - 1 புள்ளி (2 போட்டிகள், நிகர ரன் ரேட் -0.461)
இலங்கை - 0 புள்ளி (2 போட்டிகள்)
பிப்ரவரி 27: நியூசிலாந்து vs இங்கிலாந்து
பிப்ரவரி 28: பாகிஸ்தான் vs இலங்கை
சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெறும் அந்தப் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது. அதற்கு ஒரு நாள் முன்பாக, பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.
பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால், இலங்கைக்கு எதிரான கடைசிப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் அந்த அணியின் புள்ளிகள் மூன்றாக உயரும். ஆனால், அந்த வெற்றி மட்டுமே பாகிஸ்தானை அரையிறுதிக்கு அழைத்துச் செல்லாது. நியூசிலாந்து விளையாடும் போட்டியின் முடிவையும் சார்ந்தே பாகிஸ்தானின் தலைவிதி உள்ளது.

வாய்ப்பு 1:
நியூசிலாந்து அணி தனது அடுத்த போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைய வேண்டும். அதே சமயம், பாகிஸ்தான் அணி இலங்கையை வீழ்த்த வேண்டும். இப்படி நடந்தால், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது எந்த அணியின் நிகர ரன் ரேட் அதிகமாக உள்ளதோ, அந்த அணி இங்கிலாந்துடன் இணைந்து அரையிறுதிக்கு தகுதி பெறும்.

வாய்ப்பு 2:
ஒருவேளை நியூசிலாந்து அணி இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றால், நியூசிலாந்தின் புள்ளிகள் ஐந்தாக உயர்ந்துவிடும். இதனால் பாகிஸ்தான் அணி தனது கடைசிப் போட்டியில் விளையாடுவதற்கு முன்பாகவே தொடரை விட்டு வெளியேறிவிடும்.
அதேபோல, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் ரத்தானால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இதனால் நியூசிலாந்து 4 புள்ளிகளைப் பெற்றுவிடும். அப்போதும் பாகிஸ்தான் அணிக்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்.
ஒருவேளை இலங்கைக்கு எதிரான கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தால், வேறு எந்த கணக்கீடுகளும் இன்றி நேரடியாக உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறும்.
எனவே, பாகிஸ்தான் அணி தற்போது தனது வெற்றியைத் தாண்டி, இங்கிலாந்து அணியின் வெற்றியையும் நம்பிக் காத்திருக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.