மும்பை: 2026 ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. உலக கிரிக்கெட்டில் பெரும் அதிர்வலைகளை பாகிஸ்தானின் இந்த முடிவு ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பிசிசிஐயின் முன்னாள் தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான அனுராக் தாக்கூர் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ 'X' சமூக வலைத்தளக் கணக்கில் வெளியான அறிவிப்பில், டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இலங்கை செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வரும் பிப்ரவரி 15, 2026 அன்று இந்தியாவுக்கு எதிராக திட்டமிடப்பட்டிருந்த போட்டியில் பாகிஸ்தான் அணி களமிறங்காது என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்முடிவுக்கான காரணம் எதுவும் தெளிவுபடுத்தப்படவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூர், இந்தியாவிடம் விளையாடினால் மீண்டும் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மீண்டும் இந்தியாவுடன் தோற்றால் பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் கோபம் அடைவார்கள் என்றும், மானத்தை காப்பாற்ற தான் பாகிஸ்தான் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் குறை கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு, பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும், ஆசிய கோப்பை தொடரில் இறுதி போட்டி உள்பட 3 முறையும் விளையாடி, அனைத்திலும் தோல்வியை தழுவிய நிலையிலேயே அனுராக் தாக்கூர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார். பாகிஸ்தானின் இந்த முடிவுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மதன் லால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இத்தகைய முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, அவர்களின் நற்பெயரைக் களங்கப்படுத்தும் என அவர் அச்சம் தெரிவித்தார். "அவர்கள் எந்த முடிவையும் எடுக்கலாம், ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் (PCB) பாகிஸ்தான் அரசாங்கமும் தங்கள் சொந்த கிரிக்கெட்டைத்தான் சிதைக்கிறார்கள்" என்று மதன் லால் சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அரசாங்கமும் தெளிவாகச் சிந்திக்கவில்லை என்றும், இத்தகைய முடிவுகள் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்றும் அவர் மேலும் விமர்சித்தார். பாகிஸ்தானின் இந்த முடிவு, விளையாட்டு ரீதியான காரணங்களை விட, உள்நாட்டு அரசியல் காரணமாக எடுக்கப்பட்டது என்று அவர் சாடியுள்ளார்.