மும்பை: 2026ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 7 அன்று இந்தியாவில் தொடங்குகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் அமெரிக்க அணியும் ஒன்றாகும். மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக அதன் முதல் போட்டி நடைபெறும். அமெரிக்க அணியின் அதிகாரப்பூர்வ வீரர்கள் பட்டியல் இன்னும் வெளியாகாத நிலையில், அது இந்திய மற்றும் பாகிஸ்தான் வம்சாவளி வீரர்களைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தகைய வீரர்களில் வலது கை வேகப்பந்து வீச்சாளர் அலி கான் ஒருவர். 2020ஆம் ஆண்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இவருக்கு, இந்திய விசா தற்போது நிராகரிக்கப்பட்டது. இதனை இன்ஸ்டாகிராமில், "இந்திய விசா மறுக்கப்பட்டது, ஆனாலும் வெற்றிக்கு துணை நிற்கும்," எனப் பதிவிட்டிருந்தார். பாகிஸ்தானின் அட்டோக்கில் பிறந்த அலி கான், தனது 19வது வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு சென்றார். அவர் 15 ஒருநாள் மற்றும் 18 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதற்கிடையில், இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேச அணி பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி இந்தியாவுக்குப் பயணம் செய்ய வங்கதேசம் மறுத்துள்ளது.வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானின் ஐபிஎல் ஒப்பந்தம் நிறுத்தப்பட்ட பின்னரே, வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) முதன்முறையாக பாதுகாப்பு குறித்த கவலையைத் தெரிவித்தது.
2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடரில் வங்கதேச தேசிய கிரிக்கெட் அணியின் பங்கேற்பு குறித்து விவாதிக்க, வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கும் (BCB) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும் (ICC) இடையே செவ்வாய்க்கிழமை மதியம் காணொலிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் BCB சார்பில் அதன் தலைவர் அமினுல் இஸ்லாம், துணைத் தலைவர்கள் ஷகாவத் ஹொசைன் மற்றும் ஃபாரூக் அகமது, கிரிக்கெட் செயல்பாட்டு குழு தலைவர் நஸ்முல் அபதீன், மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நிஜாம் உத்தின் சௌத்ரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனையின்போது, பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி இந்தியாவுக்குப் பயணிக்க மாட்டோம் என்ற தனது முடிவை BCB உறுதியாகத் தெரிவித்தது. வங்கதேசப் போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே வேறு இடத்திற்கு மாற்றவும் ICC-யிடம் வலியுறுத்தியது. போட்டி அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டதாகக் கூறிய ICC, தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு BCB-யைக் கேட்டுக் கொண்டது. ஆனால், BCB தனது முடிவில் உறுதியாக இருந்தது. தீர்வுகளைக் கண்டறிய இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளைத் தொடர ஒப்புக்கொண்டனர்.
தங்கள் வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தாங்கள் தொடர்ந்து உறுதியாக இருப்பதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக ICC-யுடன் ஆக்கபூர்வமாகச் செயல்படுவோம் என்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.