டி20 உலககோப்பை தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கை தலைநகர் கொழும்பிற்கு திங்கட்கிழமை வந்தடைந்தது. இந்தியாவிற்கு எதிரான தங்களது குரூப் போட்டியைப் புறக்கணிக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் அரசின் உத்தரவால் பெரும் சர்ச்சைகள் எழுந்திருக்கும் சூழலில் இந்த வருகை முக்கியத்துவம் பெறுகிறது.
சல்மான் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணி செவ்வாய்க்கிழமை ஓய்வெடுத்து, மறுநாள் சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் அயர்லாந்திற்கு எதிராக தங்களது ஒரே பயிற்சிப் போட்டியில் பங்கேற்கவுள்ளது. பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் குரூப் 'ஏ’ பிரிவில் இணைக்கப்பட்டுள்ளது; அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் நமீபியா ஆகிய அணிகளும் இதில் அடங்கும். பிப்ரவரி 7 அன்று நெதர்லாந்திற்கு எதிராக தங்களது உலகக் கோப்பைப் பயணத்தைத் தொடங்குகிறது.

உலகக் கோப்பையில் இந்தியாவை எதிர்கொள்ள வேண்டாம் என்ற பாகிஸ்தான் அரசின் முடிவால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) ஐசிசியின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் அபாயத்தில் உள்ளது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஐசிசி, பிசிபி-க்கு அறிவுறுத்தி உள்ளதோடு, இல்லையெனில் "நீண்டகால தாக்கங்கள்" ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் இந்த புறக்கணிப்பில் உறுதியாக இருந்தால், பல்லாயிரம் கோடி ரூபாய் கணக்கான வருவாயை இழக்க நேரிடும். மேலும், போட்டியிலிருந்து விலகினால், ஐசிசி மட்டுமல்லாது, இந்தியாவின் ஊடக ஒளிபரப்பு உரிமையாளரான ஜியோஸ்டாருக்கும் கணிசமான நிதி இழப்பு ஏற்படும். ஜியோஸ்டார் நிறுவனம், ஐசிசியுடன் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டி புறக்கணிக்கப்பட்டால், ஒளிபரப்பு நிறுவனம் ₹200 கோடி முதல் ₹250 கோடி வரை விளம்பர வருவாய் இழப்புகளைச் சந்திக்க நேரிடும். இதில் 10 வினாடி விளம்பர இடங்களுக்கான கட்டணம் ₹40 லட்சம் வரை மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வாக்கோவர் மூலம் முழு புள்ளிகள் கிடைத்தாலும், பிசிபி மீது நிதி அபராதங்களை விதிக்கும் அதிகாரம் ஐசிசிக்கு உள்ளது.
இதனால், பாகிஸ்தானுக்கு தொடர் முழுவதும் தடை விதிக்கப்படலாம் என்று ஐசிசி ஆலோசித்து வரும் நிலையில், பாகிஸ்தான் அணி வந்தடைந்துள்ளது. இது குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா, "நாங்கள் பாக். வாரியத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்கள். எங்கள் அரசும் வாரியமும் என்ன முடிவை எடுத்தாலும், அனைத்து வீரர்களும் அதனுடன் உடன்படுகிறோம்," என்று அவர் குறிப்பிட்டார். இது அணியின் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்துரைக்கிறது.
டி20 உலகக் கோப்பை என்பது இந்தியாவிற்கு எதிராக விளையாடுவது மட்டுமல்ல. இலங்கையில் சிறப்பாகச் செயல்பட்டு, அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறுவதே அணியின் முக்கிய நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையின் தீவிரத்தை அதிகரிப்பதாக, முன்னாள் கேப்டன்களான ஷாஹித் அப்ரிடி, முகமது யூசுப், ரஷித் லத்தீப் போன்ற பல முன்னாள் வீரர்களும், மொயின் கான், சர்பராஸ் அகமது, மொஹ்சின் கான் உள்ளிட்டோரும் இந்தியாவிற்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.