டெல்லி: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வியின் கருத்துக்களை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அதுல் வசான் கடுமையாக விமர்சித்துள்ளார். 2026 ஐ.சி.சி ஆண்கள் இருபது ஓவர் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்பது குறித்து மறுபரிசீலனை செய்யலாம் என்ற நக்வியின் பேச்சு, "முட்டாள்தனமான வீரம்" என்று வசான் சாடியுள்ளார். பங்களாதேஷ் வெளியேற்றப்பட்டதை அடுத்து இந்த சர்ச்சை எழுந்தது.
இத்தகைய முடிவுகளால் வீரர்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என்றும், அரசியல்வாதிகள் அரசியல் ஆதாயம் தேடுவார்கள் என்றும் வசான் குறிப்பிட்டார். பங்களாதேஷுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பாகிஸ்தான் ஒரு பெரிய "பெருமைப் புள்ளியை" பெற முயல்கிறது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

"இது வெறும் முட்டாள்தனமான வீரம். ஐ.சி.சியை அச்சுறுத்தி, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலக அமைப்பையும் மிரட்ட முயல்கிறார்கள். அவர்கள் கிரிக்கெட்டைப் பயன்படுத்தி, அதில் பாதிக்கப்படும் வீரர்களை அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்துகிறார்கள். யார் பாதிக்கப்படுவார்கள்? வீரர்கள்தான். அவர்களுக்கு எதுவும் தெரியாது, அவர்கள் அரசியல் பகடைக்காய்கள்" என்று வசான் அ.என்.ஐ-யிடம் தெரிவித்தார்.
முன்னதாக, பங்களாதேஷ் ஐ.சி.சி-யால் வெளியேற்றப்பட்டதை அடுத்து, இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 2026 இருபது ஓவர் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்பது குறித்து மறுபரிசீலனை செய்யலாம் என மொஹ்சின் நக்வி குறிப்பிட்டிருந்தார்.
பங்களாதேஷ் அணிக்கு ஆதரவாக பேசிய நக்வி, ஐ.சி.சி அந்த நாட்டை நியாயமற்ற முறையில் நடத்தியதாகவும், இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடித்ததாகவும் குற்றம் சாட்டினார்.பங்களாதேஷ் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நக்வி, "ஐ.சி.சி வாரிய கூட்டத்திலும் இதை கூறினேன். ஒரு நாடு எப்போது வேண்டுமானாலும் ஒரு முடிவை எடுக்க முடியும், மற்றொரு நாட்டைப் பொறுத்தவரை அதற்கு நேர்மாறாகச் செயல்பட முடியாது.
இது இரட்டை நிலைப்பாடு. அதனால்தான் பங்களாதேஷ் நியாயமற்ற முறையில் நடத்தப்படுகிறது, உலகக் கோப்பையில் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தோம். அவர்கள் ஒரு முக்கிய பங்குதாரர், இந்த அநீதி நடக்கக்கூடாது" என்று தெரிவித்தார்.பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) போட்டிக்கான அட்டவணையின்படி பங்கேற்க மறுத்ததால், 2026 இருபது ஓவர் உலகக் கோப்பையில் பங்களாதேஷுக்குப் பதிலாக ஸ்காட்லாந்து இடம்பெறும் என்று ஐ.சி.சி சனிக்கிழமை அறிவித்தது. ஸ்காட்லாந்து அணி குரூப் C-யில் இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுடன் இணைந்து போட்டியிடும்.