2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் ஆட்டத்திலேயே தோல்வியின் விளிம்பில் இருந்த பாகிஸ்தான் போராடி வெற்றி பெற்றது.இந்த தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியும் நெதர்லாந்து அணியும் பலப் பரிட்சை நடத்தியது. கொழும்புவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணி தொடக்க வீரர் மைக்கேல் லீவிட் 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். அந்த அணியின் நட்சத்திர வீரரான மேக்ஸ் ஐந்து ரன்களில் வெளியேற, மூன்றாவது வீரராக களமறிய பாஸ் டி லீட் 25 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.

இதேபோன்று நடுவரிசையில் காலின் அக்கர் மேன் நான்கு பவுண்டர்களை அடித்து 14 பந்துகளில் 20 ரன்கள் சேர்க்க கேப்டன் ஸ்காட் எட்வேர்ட்ஸ் 29 பந்துகளில் 37 ரன்கள் அடித்தார். இதில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் ஆகும். எனினும் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 19.5 ஓவரில் நெதர்லாந்து அணி 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பாகிஸ்தான் பந்துவீச்சில் சல்மான் மிசா மூன்று விக்கெட்டுகளையும், முகமது நவாஸ், அப்ரார் அகமத் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனை அடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அதிரடியாக விளையாட முற்பட்ட சையும் அயூப், 13 பந்துகளில் நான்கு பவுண்டரி, ஒரு சிக்சர் என 24 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.
மூன்றாவது வீரராக சல்மான் ஆகா களமிறங்கி மூன்று பவுண்டரிகள் அடித்த நிலையில் 12 ரன்களில் ஆட்டம் இழந்தார். தொடக்க வீரர் ஃபர்கான் அதிரடி காட்டிய நிலையில் 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு பவுண்டரி, இரண்டு சிக்சர் அடங்கும். இதை அடுத்து பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 15 ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி தடுமாறியது.
இந்த சூழலில் நடுவரிசையில் உஸ்மான் கான் டக் அவுட் ஆகியும் சதாப்கான் 8 ரன்களிலும் முகமது நவாஸ் 6 ரன்களிலும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் பாகிஸ்தான் அணி 114 ரன்கள் சேர்ப்பதற்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்தது இதனால் கடைசி மூன்று ஓவரில் 33 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி இருந்தது. ஆட்டத்தின் 19 ஆவது ஓவரில் பாகிஸ்தான் அணியின் பஹிம் அசரப் மூன்று சிக்சர், ஒரு பவுண்டரி என மொத்தம் 24 ரன்கள் அடிக்க அது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து கடைசி ஓவரில் வெறும் ஐந்து ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணி கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை ருசித்தது. இதன் மூலம் பாகிஸ்தான அணி போராடி வெற்றி பெற்றது.