கொழும்பு: 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி கனவு இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கு இங்கிலாந்து அணி ஒரு முக்கிய காரணமாக மாறியுள்ளது. சூப்பர் 8 சுற்றில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பரபரப்பான போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது. இங்கிலாந்தின் இந்த வெற்றி, தொடரை விட்டு வெளியேறும் நிலையில் இருந்த பாகிஸ்தான் அணிக்கு ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பத்தில் சவால்கள் காத்திருந்தன. ஆனால், கடைசி நேரத்தில் வில் ஜாக்ஸ் மற்றும் ரஹான் அகமது ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இங்கிலாந்து அணி 3 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தால் பாகிஸ்தான் அணி நேரடியாகத் தொடரை விட்டு வெளியேறியிருக்கும். ஆனால் இங்கிலாந்து வெற்றி பெற்றதால், பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு இன்னும் மிச்சமுள்ளது.

பாகிஸ்தான் அணி தனது கடைசி சூப்பர் 8 போட்டியில் இன்று (சனிக்கிழமை) இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இங்கிலாந்து செய்த உதவியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால், இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி சாதாரண வெற்றியைப் பெற்றால் போதாது; ஒரு இமாலய வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும்.
ஏனெனில், புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணி 3 புள்ளிகளுடன் இருந்தாலும், அந்த அணியின் நிகர ரன் ரேட் +1.390 என வலுவான நிலையில் உள்ளது. மறுபுறம் பாகிஸ்தான் அணி -0.461 என்ற மைனஸ் ரன் ரேட்டில் பின்தங்கியுள்ளது. இலங்கையை வீழ்த்தினால் பாகிஸ்தான் அணியும் 3 புள்ளிகளைப் பெறும். அப்போது ரன் ரேட் மட்டுமே அரையிறுதிக்குச் செல்லும் அணியைத் தீர்மானிக்கும்.

நியூசிலாந்து அணியின் ரன் ரேட்டை முந்த வேண்டுமானால் பாகிஸ்தான் அணி பின்வரும் இரண்டு விஷயங்களில் ஒன்றைச் செய்தே ஆக வேண்டும்:
முதலில் பேட்டிங் செய்தால்: பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து ஒரு பெரிய ஸ்கோரை குவித்துவிட்டு, இலங்கை அணியை குறைந்தது 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.
இரண்டாவதாக பேட்டிங் செய்தால்: இலங்கை அணி நிர்ணயிக்கும் இலக்கை பாகிஸ்தான் அணி வெறும் 13 ஓவர்களுக்குள் அடித்து வெற்றி பெற வேண்டும்.
இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் எடுக்கும் ரன்களைப் பொறுத்து இந்த இலக்குகள் சற்று முன்னும் பின்னும் மாறலாம். ஆனால், தோராயமாக 65 ரன்கள் வித்தியாசம் அல்லது 13 ஓவர்களுக்குள் வெற்றி என்பது பாகிஸ்தான் அணிக்கு மிக அவசியமான ஒன்றாகும்.

ஏற்கனவே சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்திடம் தோல்வி, நியூசிலாந்துடனான போட்டி மழையால் ரத்து எனத் தடுமாறி வந்த பாகிஸ்தான் அணிக்கு இதுவே கடைசி வாய்ப்பாகும். இலங்கை அணி ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறிவிட்டதால், எந்தவித நெருக்கடியும் இன்றி விளையாடும். எனவே, பாகிஸ்தான் அணிக்கு இன்றைய போட்டி மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்.