மும்பை: சொந்த மண்ணில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையைத் தக்கவைத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க இரட்டைச் சாதனை படைக்க இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. இந்த தொடருக்கு ஒரு வாரத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இந்தியா தனது டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கிறது. கடந்த 3 மாதத்தில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய பெரிய அணிகளுக்கு எதிரான டி20 தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வென்றுள்ளது.
இன்னும் சொல்லப்போனால், கடந்த டி20 உலககோப்பைக்கு பிறகு நடந்த எந்த டி20 தொடரையும் இந்தியா இழக்கவில்லை. இதுவரை எந்த நடப்புச் சாம்பியனும் பட்டத்தைத் தக்கவைத்ததில்லை. எந்த சொந்த நாட்டு அணியும் கோப்பையை வென்றதில்லை. அடுத்த வாரம் இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கும் இத்தொடரில், இந்திய அணி இந்த இரு சாதனைகளையும் ஒரே நேரத்தில் நிகழ்த்தக் காத்திருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரவி சாஸ்த்ரி, "பல வீரர்கள் மீது குறைந்த சுமையே உள்ளது. இது அவர்களது முதல் உலகக் கோப்பை. தங்களை வெளிப்படுத்திக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்த முந்தைய உலகக் கோப்பையை வென்ற அணியில் இருந்து, அனுபவமும் மிகச் சிறந்த திறனும் கொண்ட வீரர்கள் உள்ளனர்."
"ஜஸ்பிரித் பும்ரா இருக்கிறார். ஹர்திக் பாண்டியா தற்போது சிறந்த ஃபார்மில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். பந்திலும் பேட்டிலும் பங்களிக்க அவருக்கு திறமை உள்ளது. சிவம் தூபேவும் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளார்.
டி20 வடிவத்தில் இந்தியா ஒரு கணிசமான சக்தியாக இருந்தாலும், மெகா ஐசிசி போட்டிக்கு முன் சில சிறிய காயங்கள் கவலை அளிக்கின்றன. வாஷிங்டன் சுந்தர் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழக்கக்கூடும், திலக் வர்மா நியூசிலாந்து தொடருக்குப் பிறகு இந்திய அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திலக் வர்மா குறித்து பேசிய ரவி சாஸ்திரி "இந்தியாவுக்கு திலக் வர்மா ஃபிட்டாக இருப்பார் என்று நம்புகிறோம், ஏனெனில் அவர் ஒரு மிகச்சிறந்த வீரர். இடது கை ஆட்டக்காரராக இருப்பதால், பேட்டிங் வரிசையில் மேல்வரிசையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார்."
"சுழற்பந்து வீச்சு ஒரு ஒருங்கிணைந்த பங்கை வகிக்கும் என்று நான் நினைக்கிறேன். அந்த சுழற்பந்து வீச்சுத் துறையில் இந்தியாவிடம் போதுமான 'ஆயுதங்கள்' உள்ளன. சக்கரவர்த்தி, அக்ஸர் பட்டேல், குல்தீப் யாதவ் போன்றவர்கள் இருக்கிறார்கள். இந்த மாறுபட்ட வீரர்களையும், சரியான இடத்தில் உள்ள வீரர்களையும சமநிலையையும் பார்க்கும்போது, இந்தியா இந்த கோப்பையைத் தற்காத்துக் கொள்ள முடியும்."
இருப்பினும், "நீங்கள் உங்கள் பட்டத்தைத் தற்காக்கும் போதும், சொந்த மண்ணில் விளையாடும் போதும் ஒரு அழுத்தம் இருக்கும், அது எங்கிருந்தோ வரும். டி20 ஆட்டத்தில் 15 நிமிடங்கள், ஒரு 10 நிமிடங்கள் மோசமாகப் போனாலும் அது ஆட்டத்தின் முடிவைத் தீர்மானிக்கும். பெரும்பாலும், இந்த 10 அல்லது 15 நிமிடங்களை அழுத்தத்தின் காரணமாகவே நீங்கள் இழக்கிறீர்கள்."
"ஆகையால், இந்தியா அந்த அழுத்தத்தை எப்படி கையாள்கிறது, அவர்கள் எப்படித் தொடரைத் தொடங்குகிறார்கள் என்பதைப் பொறுத்தது. அவர்கள் நன்றாகத் தொடங்கினால், பாதையில் ஒரு சிறு தடுமாற்றம் ஏற்பட்டாலும், அதைச் சமாளிக்க அவர்களுக்கு பேட்டிங்கில் போதுமான பலம் உள்ளது" என ரவி சாஸ்த்ரி தெரிவித்தார்.