மும்பை: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2026 டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான அம்பயர்கள் பட்டியலைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குறிப்பாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு நியமிக்கப்பட்டுள்ள அம்பயர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பைத் தொடரில் பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்புவில் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தப் போட்டிக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் இலங்கையின் குமார் தர்மசேனா ஆகியோர் கள அம்பயர்களாகச் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச விவகாரத்தைக் காரணம் காட்டி இந்தப் போட்டியைப் புறக்கணிக்கப் போவதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியிருந்த நிலையில், தற்போது ஐசிசி அம்பயர்களை அறிவித்திருப்பது போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்பதை உறுதி செய்துள்ளது.
இந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அம்பயர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி நடுவரான நிதின் மேனன், தனது நான்காவது டி20 உலகக்கோப்பைத் தொடரில் நடுவராகப் பணியாற்றவுள்ளார். மற்றொரு இந்திய நடுவரான அனந்த பத்மநாபன், முதல் முறையாக ஐசிசி நடத்தும் உலகக்கோப்பைத் தொடரில் நடுவராகச் செயல்படும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்குக் குமார் தர்மசேனா மற்றும் நியூசிலாந்தின் வெயின் நைட்ஸ் ஆகியோர் அம்பயர்களாகச் செயல்படுவார்கள். வெயின் நைட்ஸ் மற்றும் அனந்த பத்மநாபன் ஆகியோருக்கு இது முதல் டி20 உலகக்கோப்பையாகும்.
அதே பிப்ரவரி 7ஆம் தேதி இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்குப் பால் ரைஃபிள் மற்றும் ராட் டக்கர் ஆகியோர் அம்பயர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ராட் டக்கர் இந்தத் தொடரின் போது தனது 50வது டி20 உலகக்கோப்பை போட்டியில் நடுவராகச் செயல்படும் மைல்கல்லை எட்டவுள்ளார்.
போட்டி ரெப்ரீ குழுவில் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் இடம்பிடித்துள்ளார். இவருடன் டீன் காஸ்கர், டேவிட் கில்பர்ட், ரஞ்சன் மடுகல்லே, ஆண்ட்ரூ பைகிராஃப்ட் மற்றும் ரிச்சி ரிச்சர்ட்சன் ஆகியோரும் போட்டி அம்பயர்களாகச் செயல்படுவார்கள். குரூப் சுற்று போட்டிகளுக்கான அம்பயர்கள் மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர். அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான அம்பயர்கள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.