மும்பை: இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வங்கதேச அணி அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி வங்கதேசம் தொடரைப் புறக்கணித்த நிலையில், அவர்களுக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி உலகக்கோப்பையில் சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
டி20 உலகக்கோப்பைக்காக இந்தியா வரத் தங்கள் வீரர்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து கூறி வந்தது. தங்கள் கவலைகளை ஐசிசி மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் முறையாகக் கவனிக்கவில்லை என்றும், தகுந்த உத்தரவாதம் அளிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி, இந்தத் தொடரைப் புறக்கணிப்பதாக வங்கதேசம் அறிவித்தது. இது தொடர்பாக வியாழக்கிழமை அந்நாட்டு வாரியம் மற்றும் வீரர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

வங்கதேசத்தின் பிடிவாதத்தைத் தொடர்ந்து, துபாயில் ஐசிசி தலைவர் ஜெய் ஷா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வங்கதேச அணியை நீக்கிவிட்டு மாற்று அணியைச் சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான கடிதத்தை ஐசிசி சனிக்கிழமையன்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பியுள்ளது.
கடைசி முயற்சியாக, ஐசிசியின் இந்த முடிவை எதிர்த்துத் பிரச்சனைகள் தீர்க்கும் குழுவிடம் (Dispute Resolution Committee) வங்கதேசம் முறையிட்டது. ஆனால், ஐசிசியின் கொள்கை முடிவுகளில் தலையிட அக்குழுவிற்கு அதிகாரம் இல்லை என்பதால், வங்கதேசத்தின் கோரிக்கைக்குப் பலன் கிடைக்கவில்லை.
வங்கதேச அணி வெளியேறியதால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப ஸ்காட்லாந்து அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐசிசி தரவரிசை அடிப்படையில் ஸ்காட்லாந்துக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த அணி ஏற்கனவே 5 முறை டி20 உலகக்கோப்பையில் பங்கேற்றுள்ளது. கடந்த 2024 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்குக் கடும் நெருக்கடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய தகுதிச் சுற்றில் இத்தாலி, நெதர்லாந்து அணிகளுக்குப் பின் தங்கியிருந்தாலும், தரவரிசை அடிப்படையில் தற்போது அதிர்ஷ்டவசமாக உலகக்கோப்பை வாய்ப்பு ஸ்காட்லாந்துக்கு கிடைத்துள்ளது.
உலகக்கோப்பையில் 'சி' பிரிவில் ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இத்தாலி மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுன உள்ளன. ஸ்காட்லாந்து அணியின் போட்டிகள் பெரும்பாலும் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளன.
பிப்ரவரி 7: ஸ்காட்லாந்து - மேற்கிந்திய தீவுகள் (ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா)
பிப்ரவரி 9: ஸ்காட்லாந்து - இத்தாலி (ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா)
பிப்ரவரி 14: ஸ்காட்லாந்து - இங்கிலாந்து (ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா)
பிப்ரவரி 17: ஸ்காட்லாந்து - நேபாளம் (வான்கடே, மும்பை)
வங்கதேசத்தின் இந்த முடிவு அந்த நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ள நிலையில், ஸ்காட்லாந்து அணிக்கு இது ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த திடீர் மாற்றத்தால் ஸ்காட்லாந்து அணி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது.