டி20 உலககோப்பை 2026 தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் முதல் லீக் போட்டியில் முகமது சிராஜின் சிறப்பான பந்துவீச்சு குறித்து நகைச்சுவையான முன்னாள் வீரர் பத்ரிநாத் கருத்தை வெளியிட்டார். சிராஜ் இரண்டு நாட்களுக்கு முன்புதான் அழைக்கப்பட்டார் என்றும், அப்போது அவர் 'ஐதராபாத் பிரியாணி' சாப்பிட்டுக் கொண்டிருந்தார் என்றும் கூறி, சிராஜ் திறனை வெளிப்படுத்தியதற்காக அவரை பத்ரிநாத் பாராட்டினார்.
உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஹர்ஷித் ராணா காயம் காரணமாக வெளியேறியதால், முகமது சிராஜ் இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் கடைசி நிமிடத்தில் சேர்க்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஜஸ்பிரித் பும்ரா உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடாததால், 31 வயதான சிராஜ் இடம்பெற்றார்.

எந்தவித தயக்கமும் இல்லாமல், சிராஜ் முக்கியமான தருணத்தில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தனது நான்கு ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் இந்தியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய பங்காற்றினார்.
போட்டி முடிந்த பிறகு தனது யூடியூப் சேனலில் சிராஜ் பற்றிப் பேசிய பத்ரிநாத், "முகமது சிராஜ் மிகச்சிறப்பாக பந்து வீசினார். இரண்டு நாட்களுக்கு முன்பு வரை ஐதராபாத்தில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் திடீரென உலகக் கோப்பை போட்டிக்கு அழைக்கப்பட்ட போதிலும், அவர் மிக நன்றாகப் பந்து வீசினார்" என்றார்.
போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் செயல்பாடு குறித்து, பத்ரிநாத் கடும் அதிருப்தி தெரிவித்தார். அவர், "சராசரி அமெரிக்க பந்துவீச்சிற்கு எதிராக இந்தியா 45 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், பின்னர் 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும் இழந்தது ஏற்க முடியாதது. மைதானச் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாமல், சரியான பேட்டிங் திறனைக் காட்டாததே இந்தச் சரிவுக்குக் காரணம்" என்றார்.
மேலும், "வேகப்பந்துவீச்சும் சுழற்பந்துவீச்சும் இருந்த ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் கண்மூடித்தனமாக பெரிய ஷாட்களை ஆடாமல், பொறுப்புடன் விளையாடியிருக்க வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் இப்படித் தப்பித்துவிட முடியாது. இதுதான் ஒரு பெரிய பாடம்" என்றும் அவர் எச்சரித்தார்.
மும்பை வான்கடே மைதானத்தில் திரண்டிருந்த ஏராளமான ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, இந்திய அணி 13 ஓவர்களில் 77/6 என்ற மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. பின்னர், கேப்டன் சூர்யகுமார் யாதவ் களமிறங்கி, 49 பந்துகளில் 84* ரன்கள் குவித்து, அணியை 20 ஓவர்களில் 161/9 என்ற வலுவான ஸ்கோரை எட்ட உதவினார்.
சூர்யகுமார் யாதவின் பேட்டிங் திறமையையும் அவரது ஷாட்களின் வகைகளையும் பத்ரிநாத் பாராட்டினார். "அணி நெருக்கடியில் இருந்தபோது அவர் புத்திசாலித்தனமாக ஒரு இன்னிங்ஸை விளையாடினார். ஒரு பேட்ஸ்மேனின் தரம் மற்றும் திறன் எப்போதும் அவரது ஷாட்களின் வகைகளால் தான் தீர்மானிக்கப்பட வேண்டும், அங்குதான் அவர் தனித்து நிற்கிறார். ஒவ்வொரு வகையான பந்துவீச்சுக்கும், ஒவ்வொரு பந்துவீச்சாளருக்கும் அவரிடம் ஒரு பதில் இருந்தது" என்று பத்ரிநாத் கூறினார்.
"ஆறு விக்கெட்டுகள் இழந்த நிலையில், அவர் நிலைத்து நின்று பர்சன்டேஜ் கிரிக்கெட்டை விளையாடி ரன் எடுக்க வேண்டியிருந்தது. ரன்கள் எடுக்கவும் முடியாது, அதே நேரத்தில் அவுட்டாகவும் முடியாது என்பது மிகவும் கடினமான நிலை. அவர் அனைத்து பகுதிகளிலும் சமமாக ரன்கள் குவித்தார். ஆப் சைடை அவர் புறக்கணிக்கவில்லை. இதுதான் சூர்யகுமார் யாதவின் சிறப்பம்சம்" என்றார் பத்ரிநாத்.2025 ஆம் ஆண்டில் மோசமான ஃபார்முக்குப் பிறகு, சூர்யா ஆறு டி20 போட்டிகளில் அவர் 108 க்கும் அதிகமான சராசரியிலும், கிட்டத்தட்ட 190 ஸ்ட்ரைக் ரேட்டிலும் ரன்கள் அடித்துள்ளார்.