கொழும்பு: 2026 டி20 உலககோப்பையின் அரையிறுதிக்கு இலங்கை அணி தகுதி பெறுவது மிகவும் கடினமானது என இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார். சொந்த மண்ணில் நடைபெற உள்ள இப்போட்டி, அவர்களுக்கு கடினமானது என்றும் அவர் கூறியுள்ளார். தசுன் ஷனாகா தலைமையிலான இலங்கை, கடந்த ஐந்து டி20 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்று, இங்கிலாந்துக்கு எதிரான தொடர் தோல்வியைச் சந்தித்தது.
டிசம்பர் 2025-ல் சரித் அசலங்காவை நீக்கி, தசுன் ஷனாகாவை மீண்டும் கேப்டனாக இலங்கை நியமித்தது. ஷனாகா தலைமையில், 2022 ஆசிய கோப்பையை வென்றாலும், அதே ஆண்டில் நடந்த டி20 உலகக் கோப்பையில் அணி சிறப்பாக செயல்படவில்லை. பதும் நிஸ்ஸங்கா, குஷால் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, மத்தீஷ பதிரண உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அடங்கிய இலங்கை அணி , 2014 உலகக் கோப்பை சாம்பியன்கள் பட்டத்தை வென்றது.

இலங்கைக்கு அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு குறைவு என அஸ்வின் திட்டவட்டமாக கூறினார். தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், "அவர்கள் டாப் நான்கு இடங்களுக்குள் வருவது கடினம். அப்படி வந்தால் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். மேற்கத்திய அணிக்கு எதிராக ஒரு முக்கிய போட்டியில் வெல்ல நேர்ந்தால், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்சை தயார் செய்து ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தலாம்," என்றார்.
இலங்கை அணி பி பிரிவில் ஆஸ்திரேலியா, ஓமன், ஜிம்பாப்வே அத்துடன் அயர்லாந்துடன் இடம்பெற்றுள்ளது. பிப்ரவரி 8, ஞாயிற்றுக்கிழமை, பால் ஸ்டர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணிக்கு எதிராக தனது உலகக் கோப்பை பயணத்தை இலங்கை தொடங்குகிறது.ஆப்கானிஸ்தான் அணி குறித்தும் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கணிப்பை வெளியிட்டார்.
2024 தொடரில் அரையிறுதிக்கு வந்த ஆப்கானிஸ்தான், 2023 ஒருநாள் உலகக் கோப்பையிலும் சிறப்பாக செயல்பட்டது. கத்துக்குட்டி' என்ற அடையாளத்தை மாற்றி, பெரும் எதிர்பார்ப்புடன் இம்முறை களமிறங்குகிறது.சுழற்பந்துவீச்சில் பலம் பெற்றிருந்தாலும், ஆப்கானிஸ்தானுக்கு ஒரு கடினமான தொடர் அமையக்கூடும் என்று அஸ்வின் கணித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "ஆப்கானிஸ்தான் ஆசியாவில், குறிப்பாக சென்னையில் நியூசிலாந்துடன் விளையாடுவதால் அவர்களுக்கு வாய்ப்பு இருப்பதாக பலர் கருதலாம். ஆனால், சென்னை ஆடுகளம் முன்புபோல இல்லை. அவர்களின் பேட்டிங்தான் பெரிய பிரச்சனை. நல்ல, வளர்ந்து வரும் அணிதான், ஆனால் டாப் நான்கு இடங்களுக்குள் வரும் அணி அல்ல," என்றார்.ரஷீத் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, கனடா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) போன்ற பலம் வாய்ந்த அணிகள் அடங்கிய சவாலான குழுவில் இடம்பெற்றுள்ளது.