அகமதாபாத்: 2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கொழும்பில் சனிக்கிழமை நடைபெறவிருந்த பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் சூப்பர் 8 போட்டி மழையால் கைவிடப்பட்டது. அடுத்ததாக இங்கிலாந்து - இலங்கை மற்றும் இந்தியா - தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதும் போட்டிகள் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.
இதற்கிடையே, சூப்பர் 8 சுற்றுக்காக அணிகள் முன்கூட்டியே இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்ட முறை குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

பொதுவாக விளையாட்டுத் தொடர்களில் லீக் சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணிகளுக்கு அடுத்த சுற்றில் சற்றே எளிதான போட்டிகள் அமையும்படி அட்டவணை வடிவமைக்கப்படும். ஆனால், இந்த முறை ஐசிசி வகுத்துள்ள விதிகளின்படி லீக் சுற்றில் முதலிடம் பிடித்த இந்தியா, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அனைத்து அணிகளும் சூப்பர் 8 சுற்றில் குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ளன.
மறுபுறம், தங்கள் பிரிவுகளில் இரண்டாம் இடம் பிடித்த இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ளன. இதனால் லீக் சுற்றில் சிறப்பாகச் செயல்பட்டு முதலிடம் பிடித்த நான்கு சிறந்த அணிகளில் இரண்டு அணிகள் அரையிறுதிக்கு முன்பாகவே வெளியேறும் நிலை உருவாகியுள்ளது. இது விளையாட்டு விதிகளுக்கு எதிரானது என ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த விவாதம் குறித்துப் பேசிய சுனில் கவாஸ்கர், தொடர் தொடங்கி இவ்வளவு நாட்கள் கடந்த பிறகு இப்போது இது பற்றிப் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். அட்டவணை அறிவிக்கப்பட்ட போதே ரசிகர்கள் தங்கள் கேள்விகளை எழுப்பியிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இதுபற்றி பேசிய கவாஸ்கர், "இப்போது ஏன் இதைப் பற்றிப் பேசுகிறீர்கள்? தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்த விவகாரம் ஏன் எழுப்பப்படவில்லை? இப்போது இந்த கேள்விகளை எழுப்புபவர்களிடம் தான் நாம் திருப்பிக் கேட்க வேண்டும். இந்த அட்டவணை முறைக்கு என்ன காரணம் என்று ஐசிசி தான் விளக்கமாகச் சொல்ல வேண்டும். ஆனால், எனக்குத் தோன்றும் காரணம் என்னவென்றால், இந்தத் தொடர் இரண்டு வெவ்வேறு நாடுகளில் நடத்தப்படுகிறது. இதிலுள்ள போக்குவரத்து நடைமுறைகளாகக் கூட இருக்கலாம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இரண்டு நாடுகளுக்கு இடையிலான பயணம், விசா நடைமுறைகள் மற்றும் சுங்கத்துறை சோதனைகள் எனப் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டியுள்ளது. விமானம் மற்றும் தங்கும் விடுதி முன்பதிவுகளும் இதில் அடங்கும். அனைத்து அணிகளும் ஒரே எண்ணிக்கையிலான நபர்களுடன் பயணிப்பதில்லை."
"சில அணிகளில் 15 உதவிப் பணியாளர்கள் இருப்பார்கள், அவர்களுக்கு 35 முதல் 40 அறைகள் தேவைப்படும். சில அணிகளில் ஒட்டுமொத்தமாக 20 பேர் மட்டுமே இருப்பார்கள், அவர்களுக்குக் குறைவான அறைகளே போதுமானதாக இருக்கும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே அணிகள் முன்கூட்டியே பிரிக்கப்பட்டிருக்கலாம்" என்று விளக்கமளித்தார்.
டி20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பாகவே, சர்வதேச டி20 தரவரிசையின் அடிப்படையில் முதல் எட்டு அணிகளுக்கான சூப்பர் 8 இடங்களை ஐசிசி முன்கூட்டியே நிர்ணயம் செய்துவிட்டது. உதாரணத்திற்கு, தென்னாப்பிரிக்க அணி தனது லீக் சுற்றில் முதலிடம் பிடித்திருந்தாலும், உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பான தரவரிசையில் நியூசிலாந்து அணி முன்னிலையில் இருந்ததால், தென்னாப்பிரிக்காவுக்குக் குறைவான முன்னுரிமையே வழங்கப்பட்டது.
ஐசிசியின் இந்த நடவடிக்கையால் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளது இலங்கை அணி ரசிகர்கள் தான். அவர்கள் தங்களது லீக் சுற்றுப் போட்டிகள் அனைத்தையும் இலங்கையிலேயே விளையாடிய போதிலும், ஒருவேளை அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறினால், அவர்கள் இந்தியாவிற்குப் பயணம் செய்து விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்பதே அவர்களது முக்கியக் கவலையாக உள்ளது.