துபாய்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இந்திய அணிக்கு அரையிறுதிக்கு முன்னேற எளிதான பாதை கிடைத்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய தலைவலி காத்திருக்கிறது.
சூப்பர் 8 சுற்றுக்காக அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி இடம்பெற்றுள்ள பிரிவு எளிதாகவும், பாகிஸ்தான் இடம்பெற்றுள்ள பிரிவு மிகவும் கடினமாகவும் அமைந்துள்ளது. இதில் குரூப் பிரிவில் முதல் இடம் பிடித்த அணிகள் எல்லாம் முதல் பிரிவிலும், குரூப் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த அணிகள் எல்லாம் இரண்டாவது பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.

இந்திய அணி முதல் பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் இந்தியாவுடன் தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் உள்ளன. இதில் தென்னாப்பிரிக்கா மட்டுமே இந்தியாவுக்குச் சவால் அளிக்கக்கூடிய பலமான அணியாகப் பார்க்கப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் ஓரளவு நல்ல நிலையில் இருந்தாலும், இந்தியாவின் தற்போதைய பலத்திற்கு முன்னால் அந்த அணிகளால் தாக்குப்பிடிப்பது கடினம். குறிப்பாக ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து அதிர்ச்சி அளித்திருந்தாலும், இந்தியாவின் சுழற்பந்து வீச்சுப் படையைச் சமாளிப்பது அவர்களுக்குச் சவாலாக இருக்கும். எனவே, இந்த மூன்று அணிகளில் இரண்டை வீழ்த்தினாலே இந்தியா எளிதாக அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.
மறுபுறம் பாகிஸ்தான் அணி இடம்பெற்றுள்ள குரூப் 2 பிரிவு மிகவும் கடினமானதாக உள்ளது. இந்தப் பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் உள்ளன. இலங்கை அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்திவிட்டு சூப்பர் 8 சுற்றுக்கு வந்துள்ளது. மேலும், சூப்பர் 8 போட்டிகளை தனது சொந்த மண்ணில் விளையாட உள்ளது.
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளில் தனி ஆளாக ஆட்டத்தை மாற்றக்கூடிய அதிரடி வீரர்கள் உள்ளனர். பாகிஸ்தான் அணி லீக் சுற்றிலேயே இந்தியாவிடம் மோசமாகத் தோல்வியடைந்து, கடைசி நேரத்தில் தப்பிப் பிழைத்து உள்ளே வந்துள்ளது. ஏற்கனவே தடுமாற்றத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் இலங்கை என மூன்று கடினமான அணிகளைச் சமாளிப்பது பெரும் தலைவலியாக இருக்கும். இதில் இரண்டு வெற்றிகளைப் பெறுவது பாகிஸ்தானுக்குக் குதிரைக் கொம்புதான்.
இந்தியாவுக்கு எளிதான பிரிவும், பாகிஸ்தானுக்குக் கடினமான பிரிவும் அமையக் காரணம் ஐசிசியின் தரவரிசை முறைதான் (Pre-seeding). தொடர் தொடங்குவதற்கு முன்பே அணிகளின் தரவரிசை அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படி எட்டு முக்கிய அணிகள் X மற்றும் Y பிரிவில் தரம் பிரிக்கப்பட்டு இருந்தன.
இதில் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு முக்கிய இடம் (X2) ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆஸ்திரேலியா தொடரை விட்டு வெளியேறியதால், அந்த இடத்தில் ஜிம்பாப்வே அணி வந்துவிட்டது. இது இந்தியாவுக்குச் சாதகமாக முடிந்துவிட்டது. இதனால் இந்தியா பலம் குறைந்த ஜிம்பாப்வேயைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒருவேளை ஆஸ்திரேலியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருந்தால் இந்தியா இடம் பெற்று இருக்கும் பிரிவில் ஆஸ்திரேலியா இடம் பெற்று இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 22: இந்தியா - தென்னாப்பிரிக்கா (அகமதாபாத்)
பிப்ரவரி 26: இந்தியா - ஜிம்பாப்வே (சென்னை)
மார்ச் 1: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் (கொல்கத்தா)
லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி, சூப்பர் 8 சுற்றிலும் தனது ஆதிக்கத்தைத் தொடரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆனால் பாகிஸ்தான் அணி ஒவ்வொரு போட்டியிலும் வாழ்வா சாவா போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்.