மும்பை: டி20 உலககோப்பையில் இந்திய அணி தங்களது முதல் லீக் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பு சாம்பியனாக களமிறங்கியுள்ள இந்திய அணியில் ஆறு இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூர்யகுமார் யாதவ், அணியில் வலது கை வீரர்களை விட இடது கை வீரர்கள் அதிகமாக இருப்பது ஒரு நல்ல தலைவலி என்று குறிப்பிட்டார். “பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பார்ப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?” இது ஒரு நல்ல தலைவலி என்று நினைக்கிறேன். இது மிகைப்படுத்தப்பட்ட ஒரு விவாதம்.

இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் அல்லது ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக நாங்கள் நிறைய கிரிக்கெட் விளையாடிவிட்டோம், நிறைய பயிற்சி செய்திருக்கிறோம்” என்றும் அவர் விளக்கினார். “அன்றாட போட்டி சூழலில், சுழற்பந்து வீச்சாளராக இருந்தாலும் சரி, வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும் சரி, ஒன்று அல்லது இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் அல்லது வலது கை பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், உங்கள் பணி அணிக்கு சிறந்ததைச் செய்வதுதான், அதுதான் இப்போது எங்கள் அணியில் நடக்கிறது” என்றார்.
“டி20 உலகக் கோப்பைக்கு முன் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஐந்து போட்டி தொடரில் குல்தீப் மற்றும் சக்ரவர்த்தி இருவரும் விளையாடினர். ஆனால், ராய்ப்பூரில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் தான் இருவரும் ஒன்றாகக் களமிறங்கினர். அந்தப் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது” என்று சூர்யகுமார் நினைவுகூர்ந்தார்.
“இவ்வளவு திறமையான பந்துவீச்சாளர்கள் இருப்பது எங்களுக்கு ஒரு கூடுதல் பலம்தான். ஆனால், அதே நேரத்தில், எந்த அணிக்கு எதிராக யாரை விளையாட வைப்பது என்ற காம்பினேஷனையும் பார்க்க வேண்டும். இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், குறிப்பாக இரண்டு லெக் சுழற்பந்து வீச்சாளர்களைக் களமிறக்க வேண்டிய தேவை இருந்தால், நாங்கள் நிச்சயமாக அவர்களை விளையாட வைப்போம். ஆனால், வருண் சக்ரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் போன்ற உலகின் சிறந்த இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை எங்கள் வசம் வைத்திருப்பது எப்போதும் ஒரு நல்ல தலைவலிதான்” என்று தெரிவித்தார்.