மும்பை: இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக இருந்த சுப்மன் கில்லை உலகக்கோப்பை அணியிலிருந்து நீக்கிய தேர்வுக்குழு, அதே அளவு மோசமான ஃபார்மில் இருக்கும் கேப்டன் சூர்யகுமார் யாதவை மட்டும் தக்கவைத்தது ஏன்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், இதற்குப் பின்னால் ஒரு காரணம் இருப்பதாக பிசிசிஐ உள்விவகாரங்களை அறிந்த விமர்சகர்கள் கூறுகின்றனர்..
2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில், "வருங்கால கேப்டன்" எனப் போற்றப்பட்ட சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டார். கடந்த 15 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்காதது அவருக்கு வினையாக முடிந்தது. ஆனால், அவரை விட மோசமான நிலையில் இருக்கும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அணியில் தொடர்கிறார்.

புள்ளிவிவரங்களைப் பார்த்தால், சுப்மன் கில்லை விட சூர்யகுமார் நிலைமை படுமோசம். 2025-ம் ஆண்டில் 19 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள சூர்யகுமாரின் அதிகபட்ச ஸ்கோர் வெறும் 47 தான். 9 முறை ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்துள்ளார். வெறும் இரண்டு முறை மட்டுமே 25 ரன்களைத் தாண்டியுள்ளார். அப்படி இருந்தும் கில் நீக்கப்பட்டார், சூர்யகுமார் தப்பித்தார். சூர்யகுமார் தப்பியது எப்படி?
சூர்யகுமாரின் தனிப்பட்ட பேட்டிங் சறுக்கினாலும், அவரது தலைமையில் இந்திய அணி அசுர பலத்துடன் உள்ளது. அவர் கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு இலங்கை, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என அனைத்துத் தொடர்களிலும் இந்தியா வென்றுள்ளது. ஆசியக் கோப்பையிலும் 7-0 என வீறுநடை போட்டது. அணி தொடர்ந்து வெற்றி பெறுவதால், கேப்டனின் தனிப்பட்ட தோல்வி பெரிதாகத் தெரியவில்லை.
கில் களத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திணறுகிறார். ஆனால் சூர்யகுமார் களமிறங்கினால் பந்தை எதிர்கொள்ளும் விதம் நம்பிக்கையளிப்பதாக உள்ளது. நன்றாகத் தொடங்குகிறார், ஆனால் திடீரென அவுட் ஆகிவிடுகிறார். அவருக்கு பேட்டிங் டெக்னிக் சார்ந்த பெரிய பிரச்னை இல்லை எனத் தேர்வுக்குழு நம்புகிறது.
இதுவரை "ரன்கள் தான் வரவில்லை, நான் ஃபார்மில் தான் இருக்கிறேன்" எனச் சொல்லி வந்த சூர்யகுமார், முதல்முறையாக சனிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில், "ஆம், நான் ஃபார்மில் இல்லை" என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். உலகக்கோப்பைக்கு முன் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் வரவுள்ளது. இதில் பழைய சூர்யகுமாராக அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையில் பிசிசிஐ அவருக்கு வாய்ப்பளித்துள்ளது. ஆனால், கில்லுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
வெற்றிகரமான கேப்டன் என்ற ஒரே காரணத்திற்காக சூர்யகுமார் தப்பித்துள்ளார். ஆனால், டி20 உலகக்கோப்பையிலும் இதே சொதப்பல் தொடர்ந்தால் அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.