அகமதாபாத்: டி20 உலகக் கோப்பை 2026 லீக் போட்டியில், இந்திய அணி நெதர்லாந்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு தோல்வியின்றி முன்னேறியது. தனது மூன்று ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, 14 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 'ஆட்டத்தின் தாக்கத்தை ஏற்படுத்திய வீரருக்கான ' விருதை வென்றார்.
மேக்ஸ் ஓ'டவுட் மற்றும் கொலின் அக்கெர்மேன் ஆகியோரை வீழ்த்திய சக்ரவர்த்தி, பின்னர் ஆரியன் டட்டை கோல்டன் டக் அவுட் ஆக்கினார். அவரது துல்லியமான பந்துவீச்சு, நெதர்லாந்தின் ரன் வேகத்தை முடக்கி, தேவைப்படும் ரன் விகிதத்தை உயரவிடாமல் கட்டுக்குள் வைத்தது.

தொடர் முழுவதும் சிறந்த ஃபார்மில் உள்ள சக்ரவர்த்தி, நான்கு போட்டிகளில் ஒன்பது விக்கெட்டுகளுடன் இந்தியாவின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆவார். இந்த நிலையில், இந்திய அணியின் டிரஸங் ரூம்மில் உடற்பயிற்சி பயிற்சியாளர் ஆட்ரியன் லெ ரூக், 'ஆட்டத்தின் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர்' விருதை வருண் சக்கரவர்த்திக்கு வழங்கினார்.
வெற்றிக்குப் பிறகு, பேசிய வருண் சக்ரவர்த்தி, "உண்மையான தொடர் இனி தான் தொடங்ககிறது. அதற்கு வீரர்கள் அனைவரும் தயாராக வேண்டும்." என்று குறிப்பிட்டார். முன்னதாக, டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. அபிஷேக் ஷர்மா டக் அவுட் ஆகியும், இஷான் கிஷன் 18 ரன்களில் வெளியேறியும் இந்தியாவுக்குத் தொடக்கம் அதிர்ச்சியாக இருந்தது. நடு ஓவர்களில் திலக் வர்மா (27 பந்துகளில் 31) மற்றும் சூர்யகுமார் யாதவ் (28 பந்துகளில் 34) ஆகியோர் ரன் விகிதத்தை உயர்த்த சிரமப்பட்டனர்.
சிவம் தூபேவின் அதிரடியான 66 ரன்கள் (நான்கு பவுண்டரிகள், ஆறு சிக்ஸர்கள்) இந்திய அணிக்கு புத்துயிர் அளித்தது. ஹர்திக் பாண்டியா 21 பந்துகளில் மூன்று சிக்ஸர்களுடன் விரைவாக 30 ரன்கள் எடுக்க, இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் என்ற சவாலான ஸ்கோரை எட்டியது.
தோல்வியின்றி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி, அங்கு கடினமான குழுவில் உள்ளது. நடப்பு சாம்பியன்கள் தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளை அடுத்த சுற்றில் எதிர்கொள்ளும். இந்த ஆட்டங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளன.
இந்தியாவின் சூப்பர் 8 ஆட்டங்களுக்கான அட்டவணை: பிப்ரவரி 22 அன்று அகமதாபாத்தில் தென்னாப்பிரிக்காவுடன், பிப்ரவரி 26 அன்று சென்னையில் ஜிம்பாப்வேயுடன், மார்ச் 1 அன்று கொல்கத்தாவில் மேற்கிந்திய தீவுகளுடன் இந்திய அணி மோதவிருக்கிறது.