மும்பை: 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சி போட்டியில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்ட்த்தில் இந்தியா ஏ அணிக்காக களமிறங்கிய தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன் சதம் விளாசினார். மும்பையின் டி.ஒய். பாட்டில் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில், 55 பந்துகளில் 104 ரன்கள் (49 பந்துகளில் சதம்) குவித்தார்.
30 வயதான ஜெகதீசன், தனது அதிரடி இன்னிங்ஸில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை விளாசினார். திலக் வர்மாவுடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 55 பந்துகளில் 113 ரன்கள் கூட்டணி அமைத்தார். ஜெகதீசனின் வலுவான ஆட்டத்தால், இந்தியா ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் குவித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக ஐபிஎல்லில் விளையாடிய ஜெகதீசன், உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழக அணிக்காக விளையாட கூடியவர். 2025-ல் ரிஷப் பந்திற்கு மாற்றாக இங்கிலாந்துக்கு எதிராகவும், வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றார். ஆயினும், அவருக்கு டெஸ்ட் அறிமுகப் போட்டி வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்தியா ஏ அணியின் பேட்டிங்கில், கேப்டன் ஆயுஷ் பதோனி 26 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் விளாசினார். இதே போன்று காயத்திலிருந்து திரும்பியுள்ள திலக் வர்மா 24 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 38 ரன்கள் சேர்த்தார்.ஹைதராபாத்தைச் சேர்ந்த இடது கை பேட்ஸ்மேன் திலக், 2026 டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெற்று, இந்தியா ஏ அணிக்காக ஆடும் ஒரே வீரர். பிப்ரவரி 4 அன்று இதே மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் பயிற்சிப் போட்டியிலும் அவர் பங்கேற்பார்.
இப்போட்டியின் இரண்டாம் பாதியில், அமெரிக்காவின் 11-வது ஓவரை வீசிய திலக் வர்மா, முதல் பந்திலேயே தொடக்க ஆட்டக்காரர் ஆண்ட்ரீஸ் கெளஸை வெளியேற்றினார். 30 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்த கெளஸ், மும்பை இந்தியன்ஸ் சக வீரர் நாமன் தி’ரால் பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆனார். 20 ஓவர் முடிவில் இந்திய ஏ அணி 3 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்தது. 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்க அணி 19.4 ஓவரில் 200 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய ஏ பந்துவீச்சில் ரவி பிஸ்னாய் 3 விக்கெட்டுகளையும், சிஎஸ்கே வீரர் கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.