மும்பை: 2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் தேர்வு குறித்து முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். குறிப்பாக, இளம் அதிரடி ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா ஆகியோர் புறக்கணிக்கப்பட்டது ஏன் என்று அவர் தேர்வுக்குழுவை விளாசியுள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பை மற்றும் நியூசிலாந்து டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில் ஆச்சரிய தேர்வாக இஷான் கிஷன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பிடித்தனர். ஆனால், அணியின் முக்கிய வீரர்களாக கருதப்பட்ட ஜெய்ஸ்வால் மற்றும் ஜிதேஷ் சர்மா கழட்டிவிடப்பட்டனர். இதுதான் வாசிம் ஜாபரின் கோபத்திற்குக் காரணம்.

இதுகுறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ள வாசிம் ஜாபர், "இஷான் கிஷன் மற்றும் வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக நான் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜிதேஷ் சர்மாவைத் தான் தேர்வு செய்திருப்பேன்" என்று நேரடியாவே தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
வாசிம் ஜாபர் கூறுகையில், "அக்சர் படேல் அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே அவர் பிளேயிங் லெவனில் இருப்பது உறுதி. வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் முதன்மை ஸ்பின்னர்களாக உள்ளனர். அப்படி இருக்கும்போது, இவர்களுக்கு முன்னால் வாஷிங்டன் சுந்தருக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும்? அவர் பெஞ்சில்தான் உட்காரப் போகிறார். அதற்குப் பதிலாக ஒரு கூடுதல் பேட்ஸ்மேனை எடுத்திருக்கலாம்" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஜிதேஷ் சர்மா அணியிலிருந்து நீக்கப்படும் அளவிற்கு எந்தத் தவறும் செய்யவில்லை. அதேபோல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஏன் அணியில் இருக்க வேண்டும் என்பதற்கு நான் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. அவர் ஏற்கனவே தன்னை நிரூபித்தவர். அபிஷேக் சர்மா வந்ததால் ஜெய்ஸ்வாலை ஓரங்கட்டுவது சரியல்ல" என்று தேர்வுக்குழுவின் முடிவைச் சாடியுள்ளார்.
ஜிதேஷ் சர்மா சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்கத் தொடரில் இரண்டு இன்னிங்ஸில் 37 ரன்கள் எடுத்தார். முழுத் தொடரிலும் அணியுடன் இருந்த அவரைத் திடீரென நீக்கியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ஸ்வால் 2024 உலகக்கோப்பை வென்ற அணியில் இருந்தவர். ஆனால், கடந்த சில மாதங்களாக அபிஷேக் சர்மாவின் வரவால் டி20 அணியில் தனது இடத்தை இழந்து தவிக்கிறார்.
மறுபுறம் இஷான் கிஷன் சையத் முஷ்டாக் அலி தொடரில் ஜார்க்கண்ட் அணிக்காகச் சிறப்பாக ஆடியதால் இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்திய அணிக்குள் வந்துள்ளார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் அணிக்குத் திரும்புவது குறிப்பிடத்தக்கது.
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ரானா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன்.