கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்த வெற்றியின் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அடுத்தபடியாக இரண்டாவது அணியாக இந்தியா இந்த வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
ஒரு பிரிவில் உள்ள ஐந்து அணிகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். அதற்கு ஒரு அணி குறைந்தபட்சம் 6 புள்ளிகள் அல்லது 3 வெற்றிகளைப் பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் இந்தியா தனது மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று கம்பீரமாக அடுத்த சுற்றான சூப்பர் 8 -க்குள் நுழைந்துள்ளது.

இந்திய அணி தனது முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதனைத் தொடர்ந்து நமீபியாவுக்கு எதிரான போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. தற்போது பாகிஸ்தான் அணியையும் 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, குரூப் ஏ பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷன் 40 பந்துகளில் 77 ரன்கள் விளாச, இந்தியா 175 ரன்கள் குவித்தது. கடினமான ஆடுகளத்தில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களால் சோபிக்க முடியவில்லை. ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அக்சர் படேல் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் பாகிஸ்தான் 114 ரன்களில் சுருண்டது.
இந்தியாவிற்கு முன்பாகவே சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்றுள்ளது. அந்த அணி ஸ்காட்லாந்து, பலம் வாய்ந்த இங்கிலாந்து மற்றும் நேபாளம் ஆகிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது. வரும் 19ஆம் தேதி இத்தாலிக்கு எதிரான போட்டியில் அந்த அணி முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வாய்ப்புள்ளது.
அதேபோல, இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 18ஆம் தேதி நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. ஏற்கனவே சூப்பர் 8 வாய்ப்பு உறுதியாகிவிட்டதால், இந்தப் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இதுவரை வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். லீக் சுற்றில் பெறும் புள்ளிகள் சூப்பர் 8 சுற்றில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தலா இரண்டு வெற்றிகளுடன் நல்ல நிலையில் உள்ளன. வரும் 16ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அதேபோல இங்கிலாந்து அணி தனது கடைசிப் போட்டியில் இத்தாலியை வீழ்த்தினால் அவர்களும் தகுதி பெற வாய்ப்புள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி 6 புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்தாலும், அந்தப் பிரிவில் நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளின் முடிவுகளைப் பொறுத்தே அவர்களது தகுதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். தென்னாப்பிரிக்கா தனது கடைசி குரூப் சுற்றுப் போட்டியில் வென்றால் உறுதியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.