மும்பை: 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகள், இந்தியாவில் ஐந்து மைதானங்களிலும், இலங்கையில் மூன்று மைதானங்களிலும் என எட்டு மைதானங்களில் நடக்கவுள்ளன. இந்தியா தனது பட்டத்தை தக்கவைத்துக்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவிக்கும் வீரர் யார் என்பது குறித்த தங்கள் கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தான் இந்தியாவின் அதிக ரன் எடுத்த வீரராக இருப்பார் என சுரேஷ் ரெய்னா, இர்ஃபான் பதான், ராபின் உத்தப்பா ஆகியோர் ஒருமித்த கருத்தை முன்வைத்துள்ளனர். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய ரெய்னா, "இந்தியாவின் அதிக ரன் எடுக்கப்போவது யார்?" என்ற கேள்விக்கு, "இந்தியா கேப்டன்,டி20 உலகக் கோப்பை கேப்டன், சூர்யகுமார் யாதவ்" என்று உறுதியாகக் கூறினார்.

2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனான இர்ஃபான் பதான், "சூர்யகுமார் யாதவ் தான், எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது" என்று பதில் அளித்தார். சூர்யகுமார் யாதவ் குறித்து ஒருமித்த கருத்து இருந்தாலும், முகமது கைஃப் மற்றும் சஞ்சய் பங்கர் ஆகியோர் வேறு ஒரு வீரரைக் கணித்துள்ளனர். இவர்கள் நடுவரிசை ஆட்டக்காரரான திலக் வர்மா தான் அதிக ரன்கள் அடிக்கும் வீரராக இருப்பார் என்று கணித்துள்ளனர். அதேநேரம், ஆகாஷ் சோப்ரா, அனில் கும்ப்ளே மற்றும் சேட்டேஷ்வர் புஜாரா ஆகியோர், தற்போது உலகத் தரவரிசையில் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனாக இருக்கும் அபிஷேக் ஷர்மாவைத் தேர்வு செய்துள்ளனர்.
2025ஆம் ஆண்டில் டி20 போட்டிகளில் இந்தியாவின் அதிக ரன் அடித்த வீரராக திகழ்ந்த அபிஷேக் ஷர்மா, 2026லும் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்கிறார். இந்த ஆண்டு இதுவரை விளையாடிய மூன்று டி20 போட்டிகளில் இரண்டு அரை சதங்களை விளாசியுள்ளார். குறிப்பாக, ஜனவரி 21 அன்று நாக்பூரில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 35 பந்துகளில் அதிரடியாக 84 ரன்கள் எடுத்தார். ஜனவரி 25 அன்று நடந்த மூன்றாவது டி20 போட்டியில், 20 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வழிநடத்தவுள்ள சூர்யகுமார் யாதவும் மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 22 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். அதைத் தொடர்ந்து, ஜனவரி 23 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெற்ற அடுத்த இரண்டு போட்டிகளில் முறையே 82 மற்றும் 57 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது தொடர்ச்சியான இந்த சிறப்பான ஆட்டம், அவரைப் பற்றிய கணிப்புகளுக்கு மேலும் வலு சேர்க்கிறது.