சென்னை: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று (பிப்ரவரி 26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முக்கியமான போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வேவை எதிர்கொள்கிறது. அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க இந்திய அணி இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியான நிலையில் உள்ளது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மீதமுள்ள ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல், மற்ற போட்டிகளின் முடிவுகளும் இந்திய அணிக்கு சாதகமாக அமைய வேண்டும். இனிவரும் போட்டிகளில் எந்தவொரு தவறும் செய்ய இந்திய அணிக்கு இடமில்லை.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் இந்தப் போட்டி இரவு நேரப் போட்டியாக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டி நடைபெறும் நேரத்தில் காற்றில் ஈரப்பதம் 80 முதல் 90 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது மைதானத்தில் அதிக அளவில் பனிப்பொழிவு இருக்கும்.
பொதுவாக பனிப்பொழிவு இருக்கும் போது, மைதானம் ஈரப்பதமாகி பந்து வழுக்கத் தொடங்கும். இதனால் பந்துவீச்சாளர்கள் பந்தை சரியாகப் பிடித்து வீச முடியாமல் திணறுவார்கள். அதே சமயம் பேட்டர்களுக்கு பந்து நேராக பேட்டிற்கு வரும் என்பதால் ரன் குவிப்பது எளிதாகிவிடும்.
பனிப்பொழிவால் ஆட்டத்தின் போக்கு ஒருதலைபட்சமாக மாறுவதைத் தடுக்க, சேப்பாக்கம் மைதானத்தில் டியூ கியூர் என்ற புதிய ரசாயன திரவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் இருந்து பிரத்யேகமாக இறக்குமதி செய்யப்பட்ட இந்த ரசாயனம், மைதானத்தில் பனிப்பொழிவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் இந்த ரசாயன திரவம் மைதானம் முழுவதும் தெளிக்கப்பட்டது. இரவு நேரப் போட்டியில் பனியின் தாக்கத்தை முழுமையாகக் குறைக்க, போட்டியான இன்று மதியமும் இந்த திரவம் மைதானத்தில் தெளிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரம்பரியமாகவே சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஒன்றாகும். இங்கு பந்து மெதுவாக வருவதோடு, ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு கைகொடுக்கும். பேட்டர்கள் இங்கு நிதானமாக விளையாடி ரன் சேர்க்க வேண்டும். ஆனால், மைதானத்தில் பனிப்பொழிவு ஏற்படும் போது இந்த நிலைமை அப்படியே மாறிவிடும்.
பந்து ஈரமாகி வழுக்கத் தொடங்குவதால், பந்துவீச்சாளர்களால் துல்லியமாகப் பந்துவீச முடியாது. குறிப்பாக யார்க்கர் மற்றும் ஸ்லோயர் பந்துகளை வீசுவது சவாலாக மாறும். தவறாக அடிக்கப்படும் ஷாட்களும் எளிதாக பவுண்டரிக்குச் செல்லும். இதனால் பேட்டர்களை விட பந்துவீச்சாளர்களுக்கே அதிக நெருக்கடி ஏற்படும்.
இதன் காரணமாக இந்தப் போட்டியில் டாஸ் மிக முக்கியப் பங்கு வகிக்கும். இரவு நேரப் போட்டிகளில் டாஸ் வெல்லும் கேப்டன், பனிப்பொழிவைக் கருத்தில் கொண்டு முதலில் பந்துவீசுவதையே விரும்புவார். இலக்கை துரத்துவது எளிது என்பதால், இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு சற்று அதிகமாக இருக்கும்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடமும், ஜிம்பாப்வே அணி வெஸ்ட் இண்டீஸ் அணியிடமும் தங்களது முந்தைய சூப்பர் 8 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளன. எனவே, தோல்வியிலிருந்து மீண்டு வந்து வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் இரு அணிகளும் இன்று களமிறங்குவதால் இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.