அகமதாபாத்: 2026 டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஐசிசி சலுகை அளித்ததாக சமூக வலைதளங்களில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்றுக்கான குழுக்கள் பிரிக்கப்பட்ட விதம் சற்று விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. லீக் சுற்றில் தங்கள் பிரிவுகளில் முதலிடம் பிடித்த இந்தியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நான்கு அணிகளும் குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ளன.
அதேசமயம், தங்கள் பிரிவுகளில் இரண்டாம் இடம் பிடித்த நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய நான்கு அணிகளும் குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ளன. விளையாட்டுத் தொடர்களின் விதிகளின்படி, லீக் சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணிகளுக்கு அடுத்த சுற்றில் சற்றே எளிதான போட்டிகள் அமையும்படி அட்டவணை வடிவமைக்கப்படும்.

ஆனால், இந்த முறை முதலிடம் பிடித்த வலிமையான அணிகள் அனைத்தும் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளதால், இரண்டு சிறந்த அணிகள் அரையிறுதிக்கு முன்பாகவே வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது. மறுபுறம் இரண்டாம் இடம் பிடித்த அணிகளுக்கு அரையிறுதிக்குச் செல்லும் பாதை சற்று எளிதாகியுள்ளது என்ற விமர்சனம் எழுந்தது.
இந்த உலகக்கோப்பையை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காகப் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்து விளையாடாது என்பதால், அந்த அணி தனது அனைத்துப் போட்டிகளையும் இலங்கையிலேயே விளையாட வேண்டியுள்ளது. அதேபோல் இலங்கை அணியும் சொந்த மண்ணிலேயே விளையாடுகிறது. எனவே, இந்திய அணியை ஒரு குழுவிலும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளை மற்றொரு குழுவிலும் வைக்க வேண்டிய கட்டாயம் போட்டி அமைப்பாளர்களுக்கு ஏற்பட்டது.
இருப்பினும், இந்த அட்டவணை இந்திய அணிக்குச் சாதகமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், பிசிசிஐயின் தூண்டுதலின் பேரிலேயே ஐசிசி இவ்வாறு செய்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பலர் குற்றம் சாட்டி வந்தனர்.
இதற்குத் தனது யூடியூப் தளத்தில் பதிலடி கொடுத்துள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, "இந்தத் தொடர் இரண்டு நாடுகளில் நடக்கிறது. இந்தியா தனது போட்டிகளை இந்தியாவிலும், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தங்கள் போட்டிகளை இலங்கையிலும் விளையாட வேண்டும். அதனால் அவர்களைக் கட்டாயமாக வெவ்வேறு குழுக்களில் தான் பிரிக்க வேண்டும். வேறு எப்படி இந்தத் தொடரை நடத்த முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் பேசுகையில், "பிசிசிஐக்குச் சாதகமாக இது நடப்பதாகக் கூறுபவர்களிடம் நான் ஒன்றே ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு மூளை இல்லையா? தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் போன்ற பலமான அணிகளை எங்கள் குழுவில் வைத்துக்கொள்ள நாங்கள் ஏன் விரும்பப் போகிறோம்? இதனால் எங்களுக்கு என்ன லாபம்? ஆஸ்திரேலியா தோற்று வெளியேறும் என்றும், ஜிம்பாப்வே அணி முதலிடம் பிடிக்கும் என்றும் யாருக்குத் தெரியும்? எனவே எங்கள் குழுவை எளிதான குழு என்று நினைக்க வேண்டாம். எதையும் முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் முட்டாள்தனமாகப் பேசாதீர்கள், அது உங்களுக்கு அழகல்ல" என்று மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
லீக் சுற்றில் முதலிடம் பிடிப்பதில் எந்தப் பயனும் இல்லை என்ற வாதத்திற்கும் ஆகாஷ் சோப்ரா வரலாற்றுச் சான்றுகளுடன் விளக்கம் அளித்துள்ளார். "முதலிடம் பிடித்த அணிகள் ஒரே குழுவில் இடம்பெறுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பாக 2007, 2009, 2010 மற்றும் 2012 ஆகிய உலகக்கோப்பை தொடர்களிலும் இதேபோன்ற நிலை இருந்துள்ளது.
குறிப்பாக 2012-ஆம் ஆண்டில் முதலிடம் பிடித்த அனைத்து அணிகளும் துல்லியமாக இதேபோலத்தான் ஒரே குழுவில் இடம்பெற்றிருந்தன. எனவே இதில் பிசிசிஐக்குச் சலுகை என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.