மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொடரின் சிறந்த வீரருக்கான விருதை (Player of the Tournament) யார் வெல்வார்கள் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜிங்கியா ரஹானே தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். அனைவரும் எதிர்பார்த்த சஞ்சு சாம்சன் பெயரை அவர் குறிப்பிடாமல், சமீபத்திய போட்டிகளில் ரன்களை வாரி வழங்கிய இந்திய பந்துவீச்சாளரை தேர்வு செய்திருப்பது சற்று ஆச்சரியத்தை அளித்துள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் ரஹானே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தொடர் நாயகன் விருதுக்கான தனது முதல் மூன்று தேர்வுகளைப் பட்டியலிட்டுள்ளார். இதில் முதல் இடத்தைப் பிடிப்பவர் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய ரஹானே, "என்னுடைய முதல் தேர்வு வருண் சக்கரவர்த்தி தான். அவர் இந்தத் தொடர் முழுவதும் மிகச் சிறப்பாகப் பந்துவீசினார். பந்துவீச்சில் இந்திய அணிக்கான அவரது பங்களிப்பு மிகவும் அற்புதமானது," என்று பாராட்டியுள்ளார். அரையிறுதியில் வருண் அதிக ரன்களை விட்டுக் கொடுத்திருந்தாலும், அவருக்கு ரஹானே ஆதரவு அளித்துள்ளார்.

தனது பட்டியலில் அடுத்த இரண்டு இடங்களைத் தென்னாப்பிரிக்கா வீரர்களுக்கு ரஹானே ஒதுக்கியுள்ளார். அரையிறுதியில் அந்த அணி தோல்வியடைந்து வெளியேறியிருந்தாலும், லீக் சுற்றுகளில் அந்த அணியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. "எனது இரண்டாவது தேர்வு லுங்கி இங்கிடி. தென்னாப்பிரிக்கா அணிக்காக அவர் மிகச் சிறப்பாகப் பந்துவீசினார். மூன்றாவது இடத்தில் தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் உள்ளார். பேட்டிங்கில் அவரது பங்களிப்பு அபாரமானது" என்று ரஹானே தெரிவித்துள்ளார்.

ரஹானே தேர்வு செய்துள்ள வருண் சக்கரவர்த்தி, இந்தத் தொடரில் இதுவரை 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அவர் முன்னிலையில் உள்ளார். அரையிறுதியில் அவர் சற்று தடுமாறினாலும், இறுதிப்போட்டியில் அவர் சிறப்பாகச் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல லுங்கி இங்கிடி 7 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவின் முக்கியப் பந்துவீச்சாளராகத் திகழ்ந்தார். எய்டன் மார்க்ரம் 7 போட்டிகளில் 268 ரன்களைக் குவித்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 170க்கும் மேல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களைத் தவிர தொடர்நாயகன் விருது வெல்லும் வாய்ப்பு இருவருக்கு உள்ளது. இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸ் நான்கு முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் 383 ரன்கள் குவித்து அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் உள்ளார். இருப்பினும் ரஹானேவின் கணிப்பு பந்துவீச்சாளர்களை மையப்படுத்தியே அமைந்துள்ளது. சஞ்சு சாம்சன் அரையிறுதி உட்பட பல போட்டிகளில் அதிரடியாக விளையாடியிருந்தாலும், ரஹானேவின் பட்டியலில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. ஏனெனில், சாம்சன் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே ஆடி 232 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் 11வது இடத்தில் இருக்கிறார்.