டாக்கா: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இந்தியா வந்து விளையாடுவது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB), ஜெய் ஷா தலைவராக இருக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) இரண்டாவது முறையாகக் கடிதம் எழுதியுள்ளது. இதில் பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி, போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பையில், வங்கதேச அணி தனது லீக் ஆட்டங்களை இந்தியாவின் கொல்கத்தா மற்றும் மும்பையில் விளையாட அட்டவணைிடப்பட்டுள்ளது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா வர வங்கதேசம் மறுத்து வருகிறது.

"பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று எதைச் சொல்கிறீர்கள்?" என்று ஐசிசி கேட்டிருந்த கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, தங்களுக்கு உள்ள குறிப்பிட்ட அச்சங்கள் குறித்த விவரங்களை வங்கதேசம் இந்தக் கடிதத்தில் விளக்கியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், கடிதத்தின் உள்விவரங்கள் என்ன என்பது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
இந்த விவகாரத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்குள்ளேயே இருவேறு கருத்துகள் நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கதேச விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் தரப்பு, "போட்டிகளை வேறிடத்திற்கு மாற்றினால்தான் விளையாடுவோம்" என்று மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
ஆனால், பிசிசிஐ-க்கு சாதகமாக சமரசம் செய்ய முயலும் தரப்பு, ஐசிசி-யுடன் பேசி கூடுதல் பாதுகாப்பைப் பெற்றுக்கொண்டு விளையாடலாம் என்றும், போட்டிகளைப் புறக்கணிப்பது நீண்ட கால அடிப்படையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கருதுகின்றனர். பாரம்பரியமாக பிசிசிஐ-யுடன் இணக்கமாகச் செயல்பட்டு வந்த வங்கதேச வாரியம், தற்போது அரசியல் மாற்றங்களால் கடுமையான போக்கை கடைப்பிடிப்பதாகக் கருதப்படுகிறது.
வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் மற்றும் ஐபிஎல் தொடரிலிருந்து முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு பிசிசிஐ கூறியது போன்ற சம்பவங்களே இந்த மோதலுக்கு காரணம் ஆகும்.
தற்போதைய நிலவரப்படி, வங்கதேச அணியின் போட்டிகளை கொல்கத்தாவிலிருந்து கொழும்புக்கு மாற்ற ஐசிசி எந்த அதிகாரப்பூர்வ முடிவும் எடுக்கவில்லை. இருப்பினும், வங்கதேசத்தின் கடிதத்தைத் தொடர்ந்து ஐசிசி அவசர ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.