அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ள நிலையில், இந்திய அணியில் உள்ள பந்துவீச்சு பிரச்சனை குறித்து விமர்சகர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர். இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தாலும், அந்தப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் அணி நிர்வாகத்திற்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகச் சுழற்பந்து வீச்சாளர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இந்தத் தொடரின் லீக் சுற்றில் சிறப்பாகப் பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி, சூப்பர் 8 சுற்றுக்குப் பிறகு தனது ஆதிக்கத்தை இழந்துள்ளார். குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அவர் 4 ஓவர்களில் 64 ரன்களை வாரி வழங்கினார். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு இந்தியப் பந்துவீச்சாளர் ஒரு போட்டியில் விட்டுக்கொடுத்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.
எதிரணி பேட்ஸ்மேன்கள் அவரது பந்துவீச்சை எளிதாகக் கணித்து விளையாடுகின்றனர். சூப்பர் 8 சுற்றில் அவரது பந்துவீச்சு எகானமி 10க்கும் அதிகமாகச் சென்றுள்ளது. விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுக்க வேண்டிய நேரத்தில், ரன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் வருண் சக்கரவர்த்தி திணறுவது இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு ஆபத்தாக முடியலாம்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து ஏறக்குறைய 500 ரன்களைக் குவித்தன. இத்தகைய பேட்டிங்கிற்குச் சாதகமான ஆடுகளத்திலும் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே ரன்களைக் கட்டுப்படுத்தினார். அவர் 4 ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். அவரது எகானமி 6.3 ஆக உள்ளது.

ஒவ்வொரு முறையும் பும்ரா மட்டுமே அணியைக் காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்க முடியாது. தட்டையான ஆடுகளங்களில் பும்ராவுக்கு ஒருவேளை மோசமான நாளாக அமைந்தால், அதனைக் கையாள்வதற்கான மாற்றுத் திட்டம் இந்திய அணியிடம் இல்லை என்பதே நிதர்சனம். மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்குவது அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.
இந்தச் சூழலில், ஃபார்மில் இல்லாத வருண் சக்கரவர்த்திக்குப் பதிலாகக் குல்தீப் யாதவை இறுதிப் போட்டியில் சேர்ப்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. குல்தீப் யாதவ் இந்தத் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினாலும், சமீபத்திய காலங்களில் அவரது பந்துவீச்சு மிகச் சிறப்பாக உள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிராகக் குல்தீப் யாதவ் சிறப்பான சாதனையை வைத்துள்ளார். 7 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறமை குல்தீப் யாதவிடம் உள்ளது. எனவே, கோப்பையை வெல்ல வேண்டும் என்றால், அணி நிர்வாகம் ஒரு துணிச்சலான முடிவை எடுத்து வருண் சக்கரவர்த்திக்குப் பதிலாகக் குல்தீப் யாதவை அணியில் சேர்க்க வேண்டும் என்பதே கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.