பார்படாஸ்: 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இதன் மூலமாக கபில் தேவ், தோனி ஆகியோருக்கு பின் ஐசிசி கோப்பையை வென்ற 3வது இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற போது, ரோகித் சர்மா மைதானத்தில் படுத்தி தரையில் கைகளை அடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்திய அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது, ரோகித் சர்மா ஒருபக்கம் சென்று வானத்தை பார்த்து ஆனந்த கண்ணீருடன் நின்று கொண்டிருந்தார். இந்த ரோகித் சர்மா ரசிகர்களை கலங்க செய்தது.

ஏனென்றால் சொந்த மண்ணில் நடந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்திய ரோகித் சர்மா, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியடைந்த போது கண்ணீருடன் ஓய்வறைக்கு சென்றார். இதனால் இந்த வெற்றி ரோகித் சர்மாவுக்கு கூடுதல் ஸ்பெஷலானது. அதேபோல் டி20 உலகக்கோப்பையை வென்ற சில நிமிடங்களில் விராட் கோலி ஓய்வை அறிவித்தார்.
அதன்பின் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து உலகக்கோப்பையை கைகளில் ஏந்தி விராட் கோலியும், ரோகித் சர்மாவும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ட்ரெண்டாகியது. முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படத்தை பதிவிட்டு இரு ஜாம்பவான்களுக்கு வாழ்த்து கூறி பாராட்டி வந்தனர்.
இந்த நிலையில் ரோகித் சர்மாவின் தாய் பூர்ணிமாவின் இன்ஸ்டாகிராம் பதிவு ட்ரெண்டாகியுள்ளது. அந்த பதிவில், ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் தோளில் மகள் சமைரா உள்ளனர். அதில், ”தோளில் மகள் இருக்கிறாள்.. அவன் பின் தேசமே நிற்கிறது.. பக்கத்தில் சகோதரன் நிற்கிறான்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவு இரு வீரர்களின் ரசிகர்கள் மத்தியிலும் ட்ரெண்டாகி வருகிறது. ஏனென்றால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் தொடக்க காலத்தில் நல்ல நட்பு இல்லை. ஒரு கட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது, ரவி சாஸ்திரி தான் சமாதானம் செய்து வைத்தார். அந்த சூழலில் இருந்து, இருவரும் சகோதரர்கள் போல் விளையாடி இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.