பார்படாஸ் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இன்று தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் இரு அணிகள் மட்டும் தான் எந்த ஒரு போட்டியிலும் தோல்வியை தழுவவில்லை. இந்த சூழலில் மற்ற ஆசிய நாடுகள் எல்லாம் படுதோல்வியை தழுவியது.
ஆனால், இந்தியா மட்டும் தொடர்ந்து வெற்றி பெறுவது பல பேருக்கு எரிச்சலை கிளப்பி இருக்கிறது. குறிப்பாக இந்திய அணி 50 உலகக் கோப்பை, 20 ஓவர் உலகக் கோப்பை என ஆறு மாதத்தில் தொடர்ந்து இரண்டு பைனலில் விளையாடுகிறது இதேபோன்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கி இரண்டு இறுதிப் போட்டியிலும் இந்தியா தான் விளையாடியது.

இது இங்கிலாந்து போன்ற நாட்டின் முன்னாள் வீரர்களுக்கு எரிச்சலை தருகிறது. இந்த நிலையில் டி20 உலக கோப்பை அரையிறுதி ஆட்டம் கயானாவில் நடைபெற்றதால் தான் இந்தியா வெற்றி பெற்றதாகவும், இந்தியாவுக்கு மட்டும் ஏற்கனவே எந்த ஆடுகளத்தில் விளையாட போகிறோம் என்று தெரிந்தது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்திருக்கிறார்.
இந்தப் போட்டி டிரிண்டாட் மைதானத்தில் நடைபெற்றிருந்தால் இங்கிலாந்து வென்றிருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். ஏதோ ஐசிசி இந்தியாவுக்கு சாதகமாக ஆடுகளத்தை தேர்வு செய்தது என்பது போல் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு தான் தற்போது ஹர்பஜன் சிங் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கயானா தான் இந்தியாவுக்கு ஏற்ற நல்ல ஆடுகளும் என்று எதை வைத்து நீங்கள் முடிவு எடுத்தீர்கள்.
இரண்டு அணிகளுக்கும் ஒரே ஆடுகளம் தானே வழங்கப்பட்டது. அதிலும் இங்கிலாந்து அணி அரையிறுதியில் டாஸ் வென்றது மிகப்பெரிய சாதகமான விஷயமாக மாறியது. புத்தி கெட்ட முறையில் இருப்பதை நிறுத்துங்கள். இங்கிலாந்தை மூன்று பிரிவுகளிலும் இந்தியா சிறப்பாக வீழ்த்தியது. இதுதான் உண்மை. இதை ஏற்றுக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்லுங்கள். உங்கள் குப்பையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். லாஜிக் உடன் பேசுங்கள்! அதை விட்டுவிட்டு முட்டாள்தனமாக எந்த கருத்தையும் தெரிவிக்காதீர்கள் என்று ஹர்பஜன்சிங் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.