2026 டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியும், நியூநிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. 2023-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்த அதே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில், இந்திய அணி மீண்டும் ஒரு இறுதிப் போட்டியில் களமிறங்குகிறது.
எனினும், கேப்டன் சூர்யகுமார் யாதவை பொறுத்தவரை, இது ஒரு புதிய நாளாக, எண்ணி, வீரர்கள் தையரிமாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த பயணத்தை நாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கினோம். 2023-இல் நாங்கள் விட்டுச்சென்ற அதே மைதானத்திற்கு மீண்டும் வந்துள்ளோம்,கடினமான சூழ்நிலைகளில் கூட தைரியமாக இருங்கள். இதுதான் அணிக்கு நான் சொல்லும் எளிய செய்தி." என்று அவர் கூறினார்.

2023 ஒருநாள் உலகக்கோப்பை தோல்வியிலிருந்து இந்தியா பாடம் கற்றுக் கொண்டாலும், அதைவிட முக்கியமாக, 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி என இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. சூர்யகுமார் தலைமையிலான இந்த அணி, அனுபவம், மனஉறுதியுடன் களமிற்றுகிறது.
இது குறித்து பேசிய அவர், ஐசிசி தொடர்களில் விளையாடிய பல வீரர்கள் எங்கள் அணியில் உள்ளனர், பயிற்சியாளர், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் உள்ளிட்டோர் இதில் அடங்குவர் ஐசிசி நிகழ்வுகளில் அழுத்தமான சூழ்நிலைகளைக் கையாண்ட அனுபவம் அவர்களுக்கு உண்டு. இது மிகவும் உதவியாக இருக்கும். பேருந்திலோ அல்லது இரவு உணவின்போதோ அவர்களுடன் பேசும்போது, விளையாட்டில் கடினமான சூழ்நிலைகளை எவ்வாறு சமாளிப்பது என்று விவாதித்து ஒரு தீர்வைக் காண்கிறோம் என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கினார்.
இதுபோன்ற உரையாடல்கள் மிக முக்கியமானவை. இத்தகைய அரிய சந்தர்ப்பங்களில் அனுபவம் உண்மையாகவே கைகொடுக்கும், அதுவே முக்கியமானது. நியூசிலாந்து அணி குறிப்பாக என்னென்ன அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் என்பது குறித்து கவலை கொள்ளவில்லை. இறுதிப் போட்டிக்கு எதிரணியினரை தான் பெரிய அளவில் பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.
பவர்ப்ளேயில் நியூசிலாந்து ஆஃப்ஸ்பின் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி இந்தியாவின் டாப் ஆர்டரில் உள்ள இடது கை பேட்ஸ்மேன்களை இலக்கு வைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் அதையும் இந்திய அணி சமாளிக்கும் என்றும் சூர்யகுமார் நம்பிக்கை தெரிவித்தார்."ஆஃப்ஸ்பின் அச்சுறுத்தல் குறித்து நாங்கள் விவாதிக்கவே இல்லை. குறிப்பிட்ட நாளில், ஒரு பேட்ஸ்மேன் ஒரு குறிப்பிட்ட பந்துவீச்சாளருக்கு எதிராக சிறப்பாகச் செயல்பட்டால், அதைச் செய்வதும், அணிக்கு என்ன தேவையோ அதைச் செய்வதும் முக்கியம்," என்று சூர்யகுமார் யாதவ் கூறினார்.
"கடந்த போட்டியிலும், ஆஃப்ஸ்பின் பந்துவீச்சாளருக்கு எதிராக இரண்டு இடது கை வீரர்கள் இருந்தும் நாங்கள் சிறப்பாக பேட் செய்தோம். இஷான் கிஷன், ஷிவம் தூபே, மற்றும் திலக் வர்மா கூட. இந்த நிலையில், இதைப் பற்றி அதிகமாக யோசிக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இறுதிப் போட்டியில் அவர்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு வந்தால், நாங்கள் அவர்களை எதிர்கொள்ள வேண்டும், அதை நாங்கள் நிச்சயம் கையாளுவோம்."

"நாளை நான் தலைமை தாங்கப் போகிறேன் என்பதும், இத்தகைய அற்புதமான ஒரு அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வதும் ஒரு சிறப்பு உணர்வு. அதுவும் சொந்த மண்ணில். களமிறங்கும் போது நிச்சயமாக, பதற்றம் இருக்கிறது. வயிற்றின் உள்ளே பட்டாம்பூச்சிகள் பறக்கும். ஆனால் நான் எப்போதும் சொல்வது போல, அழுத்தம் இல்லையென்றால் மகிழ்ச்சி இல்லை. அதனால் நான் மிகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன்," என்று நெகிழ்ச்சியுடன் அவர் கூறினார்.