பார்படாஸ்: ஐசிசி தொடர் வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணியில் இருந்து தொடர் நாயகன் விருதை வென்ற முதல் பவுலர் என்ற சாதனையை நட்சத்திர வீரர் பும்ரா படைத்துள்ளார். டி20 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 30 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருந்த போது, 16வது ஓவரை வீச பும்ரா அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து பிரஷரை ஏற்ற, அடுத்த ஓவரில் கிளாசன் ஆட்டமிழந்தார். பின்னர் மீண்டும் 18வது ஓவரில் பவுலிங் செய்த பும்ரா, யான்சனை வீழ்த்திவிட்டு வெறும் 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

இந்திய அணியின் பக்கம் ஆட்டம் திரும்பியது அங்கு தான். மொத்தமாக 4 ஓவர்களை வீசிய பும்ரா 14 டாட் பால்கள் உட்பட 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பும்ரா ஒருபக்கம் கொடுத்த அழுத்தம் காரணமாக மற்ற பவுலர்களுக்கும் விக்கெட்டுகள் கிடைக்கும் சூழல் ஏற்பட்டது. இந்த டி20 உலகக்கோப்பையில் 8 போட்டிகளில் விளையாடிய பும்ரா 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
பும்ராவின் எகனாமி 4.17ஆக மட்டுமே உள்ள நிலையில், பவுலிங் சராசரி 8.26ஆக உள்ளது. அதில் ஸ்ட்ரைக் ரேட் 11.8ஆக உள்ளது சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட ஆஸ்திரேலியா ஜாம்பவான் மெக்ராத்திற்கு பின் சர்வதேச கிரிக்கெட்டை ஒரு பவுலராக பும்ரா டாமினேட் செய்து வருகிறார்.
வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ராபர்ட்ஸ் முதல் பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் வரை பும்ராவை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். ஐசிசி உலகக்கோப்பை தொடரின் வரலாற்றில் இந்திய பவுலர் ஒருவரை சர்வதேச ஜாம்பவான்கள் புகழ்வது இதுவே முதல்முறையாகும். அந்த அளவிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் பும்ரா ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
அதேபோல் டி20 உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றதன் மூலமாக பும்ரா மகத்தான சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதுவரை இந்திய அணி தரப்பில் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ஷிகர் தவான், விராட் கோலி உள்ளிட்ட பேட்ஸ்மேன்களே தொடர் நாயகன் விருதினை வென்றுள்ளனர். இம்முறை முதல்முறையாக இந்திய பவுலராக பும்ரா வென்று சாதனை படைத்துள்ளார்.