பார்படாஸ்: 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை லீக் போட்டிகளில் சொதப்பி வந்த தோனி, இறுதிப்போட்டியில் எப்படி மாஸ் இன்னிங்ஸ் ஒன்றை விளையாடி கோப்பையை வென்று கொடுத்தாரோ, அதேபோல் டி20 உலகக்கோப்பை தொடரில் மோசமான ஃபார்மில் உள்ள விராட் கோலி, இறுதிப்போட்டியில் தனது அதிரடியை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இறுதிப்போட்டி நாளை இரவு பார்படாஸ் மைதானத்தில் நடக்கவுள்ளது. ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் இந்திய அணி 11 ஆண்டுகளாக திணறி வரும் நிலையில், மறுபக்கம் தென்னாப்பிரிக்கா அணி ஐசிசி தொடரை வென்று 26 ஆண்டுகளாகியுள்ளது. இதனால் இரு அணிகளும் ஐசிசி கோப்பையை வெல்ல தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்த டி20 உலகக்கோப்பையை பொறுத்தவரை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மோசமான ஃபார்மில் ஆடி வருகிறார். இதுவரை 7 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி வெறும் 75 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். தொடக்க வீரராக களமிறங்குவது விராட் கோலிக்கு செட்டாகவில்லை என்றும், அவர் மீண்டும் நம்பர் 3 வரிசையில் களமிறங்க வேண்டும் என்று கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன.
இருந்தாலும் விராட் கோலி தொடக்க வீரராக வந்து அதிரடியாக விளையாட முயற்சிப்பது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஆனால் இறுதிப்போட்டியில் ஆடவுள்ள தென்னாப்பிரிக்கா அணியின் பவுலிங் வலிமையானதாக பார்க்கப்படுகிறது. ரபாடா அபார ஃபார்மில் உள்ள நிலையில், யான்சன் மற்றும் பார்ட்மேன் கட்டுக்கோப்பாக வீசி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் மஹாராஜ் மற்றும் ஷம்சி இருவரையும் விராட் கோலியால் எளிதாக சமாளிக்க முடியும். இதனால் விராட் கோலி அதிரடியாக ஆடுவதுடம் நிலைத்து நின்றும் விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி 2011 உலகக்கோப்பை தொடரின் போது இந்திய அணியின் கேப்டன் தோனி, லீக் மற்றும் நாக் அவுட் போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
ஆனால் இலங்கை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியின் போது ஃபார்மில் இருந்த யுவராஜ் சிங்கை விடவும் முன் வரிசையில் களமிறங்கி தோனி பொளந்து கட்டினார். அதுபோல் விராட் கோலியும் இறுதிப்போட்டியில் மேஜிக்கை வெளிப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதற்கேற்றபடி இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனென்றால் தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் யுக்தி ரீதியாக தயாராவதில் வல்லவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.