பார்படாஸ்: டி20 உலகக்கோப்பை தொடருக்கான இறுதிப்போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடும் போட்டி இன்று இரவு நடக்கவுள்ளது. இதனையொட்டி #DoItForDravid என்ற ஹேஷ்டாக் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகியது. இதுதொடர்பாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி வீரர்களும் அனைவரும், சச்சின் டெண்டுல்கருக்காக உலகக்கோப்பையை நிச்சயம் வெல்வோம் என்று கூறினர். அதேபோல் வென்று காட்டிய நிலையில், தற்போது டி20 உலகக்கோப்பை தொடரை ராகுல் டிராவிட்-க்காக இந்திய அணி வீரர்கள் வெல்ல வேண்டும் என்ற குரல்கள் சோசியல் மீடியாவில் எழுந்துள்ளன.

ஏனென்றால் 2007ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடந்த உலகக்கோப்பை தொடரில் குரூப் சுற்றுடன் இந்திய அணி வெளியேறியது. அதன்பின் கேப்டன்சியில் இருந்து விலகிய ராகுல் டிராவிட், தற்போது மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் பயிற்சியாளராக 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ராகுல் டிராவிட்-க்கு இதுதான் கடைசி போட்டியாகும். இதன் காரணமாக #DoItForDravid என்ற ஹேஷ்டாக் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இதுகுறித்து ராகுல் டிராவிட் பேசுகையில், எனக்கு இவர்களுக்காக வெல்ல வேண்டும் என்பது போன்ற செண்டிமெண்ட்களில் நம்பிக்கையில்லை.
எனக்கு பிடித்தமான வரிகள் ஒன்று உள்ளது. நீங்கள் ஏன் மவுண்ட் எவரெஸ்ட் உச்சத்திற்கு செல்ல வேண்டும் என்று முயற்சிக்கிறீர்கள் என்று கேள்விக்கு, அந்த நபர், மவுண்ட் எவரெஸ்ட் இருப்பதால், உச்சத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்பிகிறேன்.. என்று கூறுவார். அதுபோல் உலகக்கோப்பை தொடர் நடப்பதால், நானும் வெல்ல நினைக்கிறேன். இதனை வெல்வது யாருக்காகவும் கிடையாது. வெல்வதற்காக மட்டும் தான்.
என்னை பொறுத்தவரை நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும். இவர்களுக்காக வெல்ல வேண்டும், அவர்களுக்காக வெல்ல வேண்டும் என்பதெல்லாம் எனது சிந்தனைகளுகு எதிரானது. அதனால் இந்த விஷயங்கள் பற்றி பேசவோ, ஆலோசிக்கவோ விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.