கொல்கத்தா: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆட்டத்தின் நடுவே நடத்தப்பட்ட லேசர் ஷோ குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அரையிறுதிக்குச் செல்லும் அணியை முடிவு செய்யும் இந்த மிக முக்கியமான ஆட்டத்தில் 196 ரன்கள் என்ற கடினமான இலக்கை இந்திய அணி துரத்தியது. பவர் பிளே முடிவில் இந்திய அணி அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் எடுத்து சற்றே நெருக்கடியான நிலையில் இருந்தது. ஆட்டத்தில் எந்த ஒரு சிறிய கவனச்சிதறல் ஏற்பட்டாலும் அது இந்திய அணிக்குப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் என்ற சூழல் இருந்தது.
அப்போது மைதானத்தின் மின்விளக்குகள் அனைத்தும் திடீரென அணைக்கப்பட்டு சுமார் மூன்று நிமிடங்களுக்கு லேசர் ஷோ நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான ரசிகர்களை மகிழ்விப்பதற்காக நடத்தப்பட்ட இந்த லேசர் ஷோவால் மைதானம் முழுவதும் இருளில் மூழ்கியது.

லேசர் விளக்குகளின் வெளிச்சம் முடிந்து மீண்டும் மைதானத்தின் பிரகாசமான மின்விளக்குகள் எரியத் தொடங்கியதும், களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அந்த வெளிச்சத்திற்குத் தங்கள் கண்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள மிகவும் சிரமப்பட்டனர். பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காகச் செய்யப்பட்ட இந்தச் செயல், களத்தில் விளையாடும் வீரர்களுக்குப் பெரும் சவாலாக அமைந்தது.
வர்ணனை அறையில் இருந்த முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் இந்தச் செயலைக் கடுமையாக விமர்சித்தார். "பானங்கள் இடைவேளையின் போது இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு நடத்தப்படும் இந்த லேசர் ஷோ, பேட்டர்களுக்கோ அல்லது களத்தில் இருக்கும் யாருக்குமே எளிதான காரியம் அல்ல. இருட்டிற்குப் பிறகு மீண்டும் பிரகாசமான வெளிச்சத்திற்கு உடனடியாகக் கண்களைப் பழக்கப்படுத்துவது மிகவும் கடினம்.
இது உலகக் கோப்பைத் தொடராகும். இரண்டரை நிமிடங்களுக்கு இது போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இங்கு தேவையா? ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளின் நடுவே இதைச் செய்தால் பரவாயில்லை. ஆனால், இது நாக் அவுட் போன்ற முக்கியமான உலகக் கோப்பை போட்டி. இதில் இடைவேளையின் போது இப்படி லேசர் ஷோ நடத்துவது அவசியம்தானா?" என்று அவர் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார்.

சுனில் கவாஸ்கரின் இந்தக் கருத்துக்கு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் தனது முழு ஆதரவைத் தெரிவித்தார். "விளையாடும் வீரர்களின் பார்வையில் இருந்து பார்த்தால், இப்படி கவனம் சிதறிய பிறகு மீண்டும் ஆட்டத்தின் மீது முழு கவனத்தையும் திருப்புவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இது மிகவும் தீவிரமான ஒரு போட்டி, இதில் இப்படிச் செய்வது தவறு" என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சனின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இருப்பினும், இந்த முன்னாள் ஜாம்பவான்கள் முன்வைத்த விமர்சனங்கள் முற்றிலும் நியாயமானவை. வீரர்களின் கவனத்தைக் குலைக்கும் வகையிலான இதுபோன்ற தேவையற்ற பொழுதுபோக்கு அம்சங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும் என்பதே கிரிக்கெட் விமர்சகர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.