மும்பை: வரவிருக்கும் இருபது ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா இந்தியாவை வீழ்த்த வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் SA20 தொடர் உலகக் கோப்பைக்கு சிறந்த பயிற்சி களமாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து கோப்பையை வென்றதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா உலக சாம்பியன் ஆனது. ஆனால், ஒருநாள் மற்றும் இருபது ஓவர் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் என்று வரும்போது, அவர்களால் இன்னும் சோக்கர்ஸ் என்ற பெயரிலிருந்து விடப்பட முடியவில்லை.

சமீபத்தில், 2024 இருபது ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா தோல்வியைத் தழுவியது. இது குறித்து பேசிய கிரேம் ஸ்மித்,"இறுதிப் போட்டியில் நாங்கள் இந்தியாவை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றார். மேலும், டெஸ்ட் தொடர் வெற்றி குறித்து, "ஆம், அது மிக அற்புதமானது. இந்தியாவின் மண்ணில் சுற்றுப்பயணம் செய்வது கடினம் என்பதை நாங்கள் அறிவோம்."
"டெஸ்ட் தொடரில் நாங்கள் இவ்வளவு ஆதிக்கம் செலுத்தியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அது மிகவும் சிறப்பானது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டெஸ்ட் அணி, ஒரு கலங்கரை விளக்கமாக இருந்து வருகிறது. அது மிகச் சிறப்பாக செயல்பட்டது. டெம்பா மற்றும் சுக்ரி கான்ராட் சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ளனர். இது தொடர வேண்டும் என்று நம்புகிறேன். வெள்ளைப்பந்து கிரிக்கெட் வடிவிலும் தற்போது நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர்."
"குறிப்பாக இந்தியாவில் ஸ்பின்னை விளையாடும் அளவுக்கு மத்திய வரிசையில் போதுமான தரம் உள்ளது என்று நான் நினைக்கிறேன். எனவே, ஒரு உலகக் கோப்பையை வெல்லும் தருணம் வெகு தொலைவில் இல்லை என்று நம்புவோம்."
"இந்தியாவின் திறமையை நீங்கள் ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது. இது அவர்களுக்கு சொந்த மண்ணில் நடக்கும் உலகக் கோப்பை. கௌதம் மற்றும் மூத்த வீரர்களுக்கு இடையே இந்திய கிரிக்கெட்டில் ஒரு சுவாரஸ்யமான மாற்றம் தெரிகிறது."
"இந்திய அணி குறைந்தபட்சம் அரையிறுதிக்குக் கூடத் தகுதி பெறவில்லை என்றால் அது தனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கும்.உலகக் கோப்பைக்குச் செல்லும்போது, சவாலான சூழலில் விளையாடிய அனுபவத்துடன் செல்ல வேண்டும் என்று எப்போதும் விரும்புவோம். அதற்கு SA 20 தொடர் ஒரு வாய்ப்பாக உள்ளது."
"ஒரே ஒரு விஷயம், எங்கள் அணி வீரர்கள் எப்படி ஒருங்கிணைவார்கள் என்பதுதான் முக்கியம். பயிற்சியாளர் சுக்ரி மற்றும் ஐடன், இந்தியாவுக்கு என்ன அணியுடன் செல்வார்கள்? அவர்கள் எப்படி களம் அமைப்பார்கள், யார் எந்த இடத்தில் பேட் செய்வார்கள் என்பது விளையாடும் இடத்தைப் பொறுத்தது. இதை நம்மால் கணிக்க முடியாது, ஆனால் வீரர்கள் இங்கு தயார் செய்வதற்கு இந்தத் தளம் மிகச் சிறப்பானது," என்று ஸ்மித் கூறினார்.