அகமதாபாத்: நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை குரூப் சுற்றுப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் ஆல்-ரவுண்டர் சிவம் துபே. இந்தப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்களை இழந்த நிலையில் அவர் அதிரடியாக ரன் சேர்த்தார். 31 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். 5 சிக்ஸர்களை அடித்து வேகமாக இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
ஆனால், ஐபிஎல் தொடரின் ஆரம்ப காலத்தில் 'ஷார்ட் பிட்ச்' பந்துகளை எதிர்கொள்ள அவர் மிகவும் சிரமப்பட்டார். அந்தப் பயத்தைப் போக்க சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி கொடுத்த அறிவுரைதான் காரணம் என்று சிவம் துபே மனம் திறந்துள்ளார்.
2022ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியில் தோனியின் தலைமையின் கீழ் விளையாடி வரும் சிவம் துபே, தற்போது இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாறியுள்ளார். தனது ஆரம்ப காலச் சிரமங்கள் குறித்துப் பேசிய சிவம் துபே -
"ஐபிஎல் தொடருக்கு நான் வந்த புதிதில், வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் திணறினேன். அந்தப் பந்துகளை என்னால் சரியாக அடிக்க முடியவில்லை. ஆனால், சர்வதேச அளவில் நான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றால், இந்த பலவீனத்தைச் சரிசெய்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்காகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டேன்" என்று கூறினார்.

பொதுவாக ஒரு குறிப்பிட்ட பந்துவீச்சுக்கு எதிராகத் திணறும்போது, அதை சிக்ஸர் அடித்தால்தான் அந்தப் பயம் போகும் என்று பேட்ஸ்மேன்கள் நினைப்பார்கள். ஆனால் தோனி கூறிய அறிவுரை துபேவின் சிந்தனையையே மாற்றியமைத்தது.
"தோனி பாய் என்னிடம் ஒரு விஷயத்தைச் சொன்னார். 'ஷார்ட் பால் வரும்போது, அதை கண்டிப்பாக சிக்ஸருக்குத்தான் அடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. அதை பவுண்டரிக்கு விரட்டலாம் அல்லது ஒரு ரன் எடுத்துவிட்டு மறுமுனைக்குச் செல்லலாம். விக்கெட்டை விடாமல் இருப்பதுதான் முக்கியம்' என்று கூறினார். அந்த வார்த்தைகள் என் மனதில் ஆழமாகப் பதிந்தன" என்று துபே தெரிவித்தார்.
தோனியின் இந்த அறிவுரைக்குப் பிறகு, ஷார்ட் பிட்ச் பந்துகளைக் கண்டு பயப்படாமல், சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடக் கற்றுக்கொண்டதாகத் துபே கூறினார். நெதர்லாந்துக்கு எதிராகப் போட்டியில் 66 ரன்கள் விளாசிய சிவம் துபே, தற்போது சுழற்பந்து வீச்சை மட்டுமல்லாமல், வேகப்பந்து வீச்சையும் சிறப்பாகக் கையாண்டு வருகிறார். தோனியின் வழிகாட்டுதலே தனது இந்த மாற்றத்திற்குக் காரணம் என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
அகமதாபாத்தில் நடந்த 2026 டி20 உலகக்கோப்பை குரூப் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, சிவம் துபேயின் அதிரடி மூலம் 6 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய நெதர்லாந்து 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக ரன்களைக் கட்டுப்படுத்தினர். சிவம் துபே பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு 2 விக்கெட் வீழ்த்தினார்.