
அக்டோபர், நவம்பரில் நடத்த திட்டம்
டி20 உலக கோப்பை தொடர் இந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி துவங்கி நவம்பர் 15ம் தேதிவரை ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாவால் ஆஸ்திரேலியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் செப்டம்பர் 30ம் தேதிவரை வெளிநாட்டினர் அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு டி20 உலக கோப்பை தொடர் நடத்துவது சாத்தியமில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எந்த முடிவும் இல்லை
இதனிடையே டி20 உலக கோப்பை உள்ளிட்டவை குறித்து விவாதிக்க கடந்த வியாழக்கிழமை ஐசிசி தலைமை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. வீடியோ கால் மூலம் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் ஜெய் ஷா கலந்து கொண்டார். ஆனால் இந்த கூட்டத்தில் டி20 உலக கோப்பை குறித்து முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆயினும் ஐசிசி மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்த விவகாரத்தில் என்ன செய்ய முடியும் என்பது குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக கிரிக்கெட் ஆஸ்திரேலிய தலைமை நிர்வாகி கெவின் ராபர்ட்ஸ் கூறியுள்ளார்.

பிசிசிஐ திட்டவட்டம்
இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரை வரும் அக்டோபர் மாதத்தில் நடத்துவது நடைமுறையில் சாத்தியமில்லை என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். பல நாடுகளில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த தொடர் நடத்தப்படாது என்று அவர் கூறியுள்ளார். மேலும் வீரர்கள், ரசிகர்களின் பாதுகாப்பு குறித்தும் ஐசிசி மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா உடனடி முடிவு எடுக்க முடியாது என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

பிசிசிஐ கேள்வி
அப்படியே ஐசிசி மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இதுகுறித்து முடிவெடுத்து செயல்படுத்தினாலும், மற்ற நாடுகள் இந்த நெருக்கடியான நேரத்தில் தங்களுடைய அணியை தொடரில் பங்கேற்க அனுப்புமா என்பதும் சந்தேகமே என்றும் பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார். இதனிடையே, ரசிகர்கள் இல்லாத டி20 உலக கோப்பையை நினைத்து பார்க்க முடியவில்லை என்று ஆஸ்திரேலிய குறைந்த ஓவர்கள் கேப்டன் ஆரோன் பின்ச் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











