
வெற்றி கட்டாயம்
இந்தியா மற்றும் நியூசிலாந்து என இரு அணிகளுமே பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்துள்ளது. ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணியே அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். அதன்படி பாகிஸ்தான் முதலிடத்தை பிடித்துக்கொண்டது. ஆனால் 2வது இடத்திற்கு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. அதற்கான முக்கிய போட்டி தான் இன்று நடைபெறுகிறது.

டாஸில் தோல்வி
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் இந்திய அணி டாஸில் தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளார். இது இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடும் என முன்னாள் வீரர்கள் எச்சரித்து வருகின்றனர்.

என்ன காரணம்
துபாய் மைதானத்தை பொறுத்தவரை இரவு நேரங்களில் அதிகளவில் பனிப்பொழிவு இருக்கும். இதனால் பந்துவீச பவுலர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். ஆட்டத்தின் தொடக்கத்தில் பனிப்பொழிவு இருக்காது என்பதால் பந்துவீச்சை தேர்வு செய்து குறைவான ஸ்கோருக்குள் எதிரணியை சுருட்டிவிடலாம். 2வதாக பேட்டிங் செய்யும் போது பனிப்பொழிவு இருக்கும் என்பதால் பந்துகள் சரியான லெந்த் செல்லாமல் வழுக்கும். இதனால் சுலபமாக இலக்கை அடையலாம்.

ரசிகர்கள் விமர்சனம்
இதன் காரணமாக தான் இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வெல்ல வேண்டும் என்பது முக்கியமாக பார்க்கப்பட்டது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட் கூட இந்திய அணியால் எடுக்க முடியாததற்கும் இதுவே காரணமாக இருந்தது. இதனையடுத்து விராட் கோலியை ராசியே இல்லாத கேப்டன், இந்த போட்டியும் தோல்விதான் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications